மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து ‘ஏக், தோ, தீன்...’ பாடப் போகிறார் சமந்தா... "24" படத்துக்காக!
சென்னை : விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் '24' படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. அப்படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
மாஸ் படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் '24' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் பாடல் பதிவு உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.
தற்போது இப்படத்தின் நாயகி சமந்தா எனத் தெரிய வந்துள்ளது.
மற்ற படங்களைப் போல ஹீரோவுடன் டூயட் பாடினோம் என்று மட்டும் இல்லாமல், இப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் பேசப்படும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளதாம். அதிலும் குறிப்பாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரமாம்.
எனவே, அஞ்சான் படத்தில் கவர்ச்சி விருந்தளித்த சமந்தா, இப்படத்தில் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தளிக்கப் போகிறாராம்.


Click it and Unblock the Notifications












