நாக சைதன்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம்.. அதெல்லாம் தேவையில்லாத செலவு.. சமந்தா ஓபனா சொல்லிட்டாங்களே
சென்னை: சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக வருண் தவான் நடித்திருந்தார். ராஜ்&டிகே இயக்கியிருந்த அந்த வெப் சீரிஸ் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது. அதிலும் சமந்தாவின் நடிப்புக்கு அப்ளாஸ் நிறையவே வந்தன. இந்தச் சூழலில் வருண் தவானும், சமந்தாவும் கலந்துகொண்ட ஒரு பேட்டியில் நாக சைதன்யா குறித்து சமந்தா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. கோவாவில் அவர்களின் திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. தெலுங்கு திரையுலகில் நாகார்ஜுனாவின் குடும்பம் பெரிய குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் குடும்பத்தில் சமந்தா மருமகளாக சென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதேசமயம் இவர்களது காதலுக்கு நீண்ட யோசனைக்கு பிறகே நாகார்ஜுனா குடும்பம் ஓகே சொன்னதாக அப்போதே தகவல்கள் வெளியாகின.

திருமணத்துக்கு பின்னும் நடிப்பு: நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு சமந்தா நடிப்பிலிருந்து விலகிவிடுவார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமந்தா தொடர்ந்து நடித்தார். அதற்கு நாக சைதன்யாவின் ஃபுல் சப்போர்ட்டும் இருந்ததாகவே தெரிகிறது. ஆனால் நாகார்ஜுனாவுக்கோ அல்லது அவரது குடும்பத்தில் இருந்த மற்றவர்களுக்கோ சம்மு தொடர்ந்து நடிப்பது பிடிக்கவில்லை என்றும்; அதனால் அவ்வப்போது பிரச்னைகள் வந்துகொண்டிருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
பிரிந்த ஜோடி: சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதற்கு காரணம் திருமணத்துக்கு பிறகான நடிப்புதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த பிரிவு குறித்து இருவரும் அமைதியாகவே இருக்கின்றனர். அதேபோல் ஜீவனாம்சமாக நூறு கோடி ரூபாயை கொடுக்க நாக சைதன்யா கொடுக்க முன் வந்ததாகவும்; ஆனால் அதனை சமந்தா மறுத்துவிட்டதாகவும் இப்போதுவரை பேசப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நடிக்க வந்த சமந்தா: விவாகரத்துக்கு பிறகு சமந்தா முடங்கிவிடுவார் என்றுதான் பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் அதற்கு பிறகுதான் அவரது கரியர் உச்சம் சென்றது. அதேசமயம் அந்த நேரத்தில்தான் சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோயும் வந்தது. இதன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அந்தவகையில் அவர் ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான அந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
சமந்தா, வருண் தவான்: இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பாக வருண் தவானும், சமந்தாவும் பங்கேற்கும் Spy - Cy Rapid Fire With Samantha And Varun Dhawan என்ற நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் சமந்தாவிடம் வருண் தவான், 'உங்கள் வாழ்க்கையிலேயே நீங்கள் தேவையில்லாமல் செலவு செய்த பெரிய தொகை எது?' என்று கேள்வி கேட்கிறார்.
சமந்தாவின் பதில்: அதற்கு சமந்தாவோ சிரித்துக்கொண்டே, 'என்னுடைய முன்னாள் காதலருக்கு நான் செய்த விலை மதிப்பற்ற கிஃப்ட்' என்று கூறுகிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அச்சோ நாக சைதன்யா பற்றி சமந்தா இப்படி ஓபனாக அடித்துவிட்டாரே. அப்படி என்ன கிஃப்ட் கொடுத்திருப்பார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முன்னதாக சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை அடுத்த மாதம் இரண்டாவது திருமணம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











