நயன்தாரா இடத்தை பிடித்துவிட்டாரா சமந்தா?.. மலையாளத்தில் என்ட்ரி கொடுக்குறாங்களாம்
சென்னை: நடிகை சமந்தா கோலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். நாக சைதன்யாவை திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்ட அவர்; சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்துவரும் சமந்தா; வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும். இந்தச் சூழலில் அவர் மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
சமந்தா டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். நாக சைதன்யாவின் குடும்பம் பெரியது என்பதால் அவர்கள் சமந்தா - நாக சைதன்யாவின் காதலை திருமணம் வரை சென்று சேர்ப்பார்களா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவியது. ஆனால் நல்ல வேளையாக இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார்கள்.

சமந்தாவுக்கு வந்த பிரச்னை: திருமண முறிவுக்கு பிறகு ஒரு பாடலில் நடனம் ஆடிய சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி படங்களின் ரிசல்ட் அமையவில்லை. முக்கியமாக சாகுந்தலம் படம் பலத்த அடி வாங்கியது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படம் என்ற பெயரையும் அப்படம்தான் பெற்றது.
குட்டி ரெஸ்ட்: சூழல் இப்படி இருக்க திடீரென சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று சமந்தா அறிவித்தார். அறிவித்தது மட்டுமின்றி படங்களுக்காக தான் வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையையும் அந்தந்த தயாரிப்பாளர்களிடம் முறைப்படி திருப்பி அளித்தார். சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். சமந்தாவுக்கு மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டது அதற்கான சிகிச்சைக்காகத்தான் அவர் சினிமாவிலிருந்து குட்டி ரெஸ்ட் எடுத்திருக்கிறார் என்றனர் திரைத்துறையினர்.
ரீ என்ட்ரி: சமந்தா இப்போது தன்னுடைய முடிவிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஹிந்தி படம் ஒன்றிலும், தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள என்ட்ரி: இந்நிலையில் சமந்தா குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி மலையாள திரையுலகில் அவர் அறிமுகவிருக்கிறாராம். அதாவது கௌதம் மேனன் மம்மூட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் முதலில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை கௌதம் தொடங்கியதாகவும்; ஆனால் அது வெற்றிகரமாக முடியாததால் சமந்தாவை நடிக்க வைக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











