'அது அடிப்படை உரிமை.. யாரும் கட்டாயப்படுத்த முடியாது..' ரத்த பரிசோதனைக்கு சஞ்சனா கல்ராணி மறுப்பு!
பெங்களூரு: போதை மருந்து விவகாரத்தில் ரத்த பரிசோதனைக்கு நடிகை சஞ்சனா கல்ராணி ஆவேசமாக மறுப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூருவில், தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு கன்னட திரையுலகினருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்திரஜித் லங்கேஷ்
இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் அதிரடியானக் குற்றச்சாட்டை வைத்தார். இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாகக் கூறிய அவர், அதைப் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ராகிணி திவேதி
அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகை ராகிணி திவேதியுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. ராகிணி வீட்டில் கடந்த 4 ஆம் தேதி சோதனை செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பரும் தொழிலதிபருமான ராகுலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சஞ்சனாவை கடந்த 8 ஆம் கைது செய்தனர்.

சஞ்சனா கல்ராணி
போலீஸ் காவலில் உள்ள இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சஞ்சனா கல்ராணிக்கு, போதைப் மருந்து பயன்படுத்தி இருக்கிறாரா என்பதை அறிவதற்கான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் ரத்த மாதிரி எடுக்க மருத்துவர்கள் முயன்றனர். அதற்கு சஞ்சனா ஆவேசமாக மறுப்புத் தெரிவித்தார்.

ரத்த பரிசோதனை
அவர் கூறும்போது, 'போலீஸ் மீதான நம்பிக்கை போய்விட்டது. நான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை. காரணத்தையும் சொல்லவில்லை. எனக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டால், அது என்னுடையதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனது வழக்கறிஞர்கள் ரத்த பரிசோதனைக்கு மறுப்பு தெரிக்கும்படி கூறியிருக்கிறார்கள்.

கட்டாயப்படுத்த முடியாது
இது என் அடிப்படை உரிமை. ரத்த மாதிரி கொடுக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நீங்கள் என்னை முட்டாளாக்கி இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள். எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் போனில் பேசியதால் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டதாக அர்த்தமல்ல' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் பேசும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











