வீடியோ காலில் கணவருடன் சண்டை.. தூக்கிட்டுத் த*கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை!
சென்னை: சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 36. நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த நடிகை சுபாஷினி பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்த நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கலில் இருக்கும் பிரபலமான தனியார் குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. சின்னத்திரை மட்டுமின்றி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்திருப்பதோடு, இன்ஸ்டாகிராம், ட்வீட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சீரியல் நடிகை: இந்நிலையில், நேற்று இரவு நடிகை சுபாஷினி, தனது கணவர் பிப்பினுடன் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முயற்றி இருவருக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நடிகை சுபாஷினி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தகவல் வந்ததை அடுத்து ஐயப்பன்தாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தூக்கிட்டு தற்கொலை: நடிகை தற்கொலை செய்து கொண்ட செய்தியை போலீசார் பிப்பினுக்கு தெரிவித்ததை அடுத்து சென்னை வந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தற்கொலை தானா என்ற கோணத்திலும் போலீசார் அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். அவரின் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின் இதுகுறித்து தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை நடிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சினேகா தற்கொலை தடுப்புமையம்: எந்தவிதமான பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல, மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவி மையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications











