மீண்டும் "துள்ளுவதோ இளமை" செரீன்.. "திகில்" காட்ட வருகிறார்!
சென்னை: துள்ளுவதோ இளமை மூலம் இளசுகளின் மனதைக் கசக்கிப் பிழிந்த செரீன் சில படங்களில் நடித்த பிறகு காணாமல் போன செரீன் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார்.. திகில் படம் மூலம்.
படத்தின் பெயரே திகில்தான். மிராக்கிள் மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் அசோக் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக செரீன் நடிக்கிறார்.

துள்ளிய இளமை
தனுஷ் நடித்து அறிமுகமான துள்ளுவதோ இளமைதான் செரீனுக்கும் முதல் படம். காந்தக் கண்களால் கவர்ச்சி காட்டி ரசிகர்களை அப்படத்தில் வசீகரித்திருந்தார் செரீன்.

தொடர் வாய்ப்புகள் இல்லாத மாயம்
ஆனால் அவருக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் சிறப்பாக இல்லை. விசில் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் வந்து போயிருந்தார்.

காணவில்லை
அதன் பின்னர் செரீனைக் காணவில்லை. அவர் நடிப்பை விட்டும் போய் விட்டார். இந்த நிலையில் திகில் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

கன்னடப் படம்
கல்கி ஸ்ருதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திகில் படம் கன்னடத்துப் படமாகும். அது தமிழுக்கு வருகிறது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் சந்தோஷ் கொடன்கேரி.

ஹாரர் படம்
இப்படத்தின் கதை குறித்து இயக்குநர் கூறுகையில், இது ஒரு திகில் கலந்த ஹாரர் படம். ஒரு இரவில் நடக்கும் கதை என்பதால் திகில் அதிகமாக இருக்கும்.

கூர்க் மாளிகையில் செரீன்...
சென்னையில் இருக்கும் செரீன் தனது வருங்கால கணவரை சந்திக்க கூர்க் என்ற இடத்திற்கு வந்து ஒரு மாளிகையில் தங்குகிறார். மலைப் பிரதேசம் என்பதால் இரவு பயணத்தை தவிபதற்காகத்தான் கூர்கில் தங்குகிறார்.

இரவு நேரத்து அனுபவங்கள்
அந்த இரவில் அவர் சந்திக்கும் திகில் அனுபவங்கள்தான் கதை. விடிந்து அவர் தனது வருங்கால கணவரை சந்திக்க மைசூர் சென்றாரா இல்லையா என்பதை திரைக்கதை திகிலுடன் சொல்லும். படப்பிடிப்பு சென்னை, கூர்க், மைசூர் மற்றும் இயற்கை எழில் நிறைந்த இடங்களில் நடைபெற்று முடிந்திருக்கிறது என்றார்.
கவர்ச்சியில் கிலியூட்டிய செரீன், திகிலில் திகைப்பூட்டுவாரா என்பதைப் படம் பார்த்ததும்தான் சொல்ல முடியும்.


Click it and Unblock the Notifications











