கார் ரேஸில் அஜித்.. பதற்றமாக இருக்கிறது.. என் படங்களை பிள்ளைகள் பார்த்ததே இல்லை.. ஷாலினி ஓபன் டாக்
சென்னை: அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஷாலினி. அந்தத் தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கிய அவர்; சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்துவந்தார். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் பேசிய விஷயங்கள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷாலினி. அப்போதே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் அவர். அதனையடுத்து காலங்கள் செல்ல ஷாலினியும் வளர்ந்தார். அப்படி வளர்ந்த அவர்; தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்துக்கு பிறகு பிரியாத வரம் வேண்டும், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சிறந்த நடிகை: ஷாலினியின் நடிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. துறுதுறு நடிப்பும், டயலாக் டெலிவிரியும் பார்ப்பதற்கே அவ்வளவு சிறப்பாக இருக்கும். அலைபாயுதே படத்தில் எல்லாம் அவ்வளவு கஷ்டமான சீன்களில் எல்லாம் ரொம்பவே அசால்ட்டாக ஸ்கோர் செய்திருப்பார். இப்போதுவரை அந்தப் படத்தை ஷாலினியின் நடிப்புக்காகவே பார்க்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அதேபோல் தமிழில் கிளாமர் காண்பிக்காமல் வெல்ல முடியும் என்று நிரூபித்த நடிகைகளில் ஷாலினியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துடன் காதல்: இதற்கிடையே அமர்க்களம் படத்தில் நடித்தபோது அவருக்கும், அஜித்துக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததால்; அவர்கள் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு ஒரு மகளையும், மகனையும் பெற்றார். மேலும் ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கி பிள்ளைகளை வளர்ப்பதிலும், பேட்மிண்டன் விளையாடுவதிலும் முழு மூச்சாக இருந்தார். அதேபோல் அஜித்துக்கு பக்கபலமாகவும் இருந்தார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி யார் என்று ரசிகர்கள் கேட்டால்; அவர்கள் சொல்லும் முதல் பெயர் அஜித் - ஷாலினிதான். ஏன் சிம்புகூட நடிகை ஹன்சிகா மோத்வானியுடனான காதலை அறிவித்தபோது நாங்கல் அஜித் - ஷாலினி போல் இருப்போம் என்றுதான் சொல்லியிருந்தார்.
ரேஸில் அஜித்; கூடவே ஷாலினி: அஜித் இப்போது ரேஸில் முழு கவனம் செலுத்திவருகிறார். அவர் ரேஸ் ஓட்டும்போதெல்லாம் அந்த சர்க்யூட்டில் பெரும்பாலும் ஷாலினியும் இருப்பது வழக்கம். அது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். அண்மையில்கூட ஏகே ரேஸ் தொடர்பான விருதை வாங்கும்போது பெருமையோடு அதை கண்டு ரசித்தார். இந்நிலையில் இத்தனை வருடங்கள் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளையும் தவிர்த்துவந்த ஷாலினி இப்போது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஷாலினி பேசியது: அப்போது பேசிய அவர், 'என் குழந்தைகள் இதுவரை என்னுடையய் எந்தப் படத்தையும் பார்த்தது இல்லை. ஒவ்வொரு முறை திட்டமிடும்போதும் அம்மா அப்புறமாக பார்க்கலாம் என்று சொல்லிவிடுவார்கள். சமீபத்தில் என்னுடைய மகள் வந்து 'அம்மா உங்களுடைய அலைபாயுதே படத்தை பற்றி என்னுடைய தோழி கூறினாள். கதை மிகவும் அருமையாக இருக்கும் என சொன்னாள். அந்தப் படத்தை பார்க்க வேண்டும்' என்றார். ஆனால் அது நடக்கவில்லை.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோதுகூட மகனிடம் சொன்னேன். அவர் ஆர்வமானார். அம்மா படத்தை பார்க்கலாமே என்று சொன்னேன். அமர்க்களம் படம் மூலம்தான் நான் உங்கள் அப்பாவை சந்தித்தேன் என்றெல்லாம்கூட சொல்லி பார்த்துவிட்டேன். அதையும் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்" என்றார். மேலும் அஜித் பற்றி பேசிய அவர், "அஜித் இந்த நொடி துபாயில் ரேஸில் இருக்கிறார். எனக்கு பதற்றமாக இருக்கிறது. அவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications















