தியேட்டரே காலி.. வசூலில் மட்டும் சாதனையாம்.. பெரிய ஹீரோக்கள் மீது அட்டாக்?.. என்ன சிம்ரன் இதெல்லாம்?
சென்னை: தமிழ் சினிமாவை கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக ஆண்டவர் சிம்ரன். அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்ட அவர்; தெலுங்கிலும் தன்னுடைய கொடியை உயர பறக்க வைத்தார். திருமணமாகி சில வருடங்கள் ஒதுங்கியிருந்த அவர்; இரண்டாவது இன்னிங்ஸில் தரமான கேரக்டர்களாக, கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சமீபத்திய நிலைமை பற்றி அவர் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மும்பையை சேர்ந்த சிம்ரன் தமிழில் விஐபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதேசமயம் நேருக்கு நேர், ஒன்ஸ்மோர் ஆகிய படங்களிலும் அவர் கமிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த முதல் மூன்று படங்களுமே சூப்பர் ஹிட்டடித்ததால் உடனடியாக அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தன. வெறும் அழகு மட்டுமில்லாமல் நடிப்பு, நடனம் என அத்தனையும் இருந்ததால் தமிழ்நாட்டில் அனைவருமே அவரது ரசிகர்களாக மாறினார்கள்.
உயர பறந்த சிம்ரன் கொடி: அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே கோலிவுட்டில் அவரது கொடி உயர பறந்தது. அப்போது வளர்ந்து வந்த ஹீரோக்களாக இருந்த விஜய், அஜித் உள்ளிட்டோருடன் மாறி மாறி நடித்தார். அதேபோல் மறுபக்கம் கமல்ஹாசன், சரத்குமார், அர்ஜுன் என சீனியர் நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். இதன் காரணமாக சிம்ரனின் மார்க்கெட் உச்சத்துக்கு என்று அவரது அலைதான் பலமாக அடித்தது. எப்படியாவது அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டார்கள்.

திருமணமாகி செட்டில்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர்; தன்னுடைய காதலர் தீபக் என்பவரை கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். திருமணத்துக்கு பின்பு சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கும் சூழல் ஏற்பட; முழுவதுமாக குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நடிக்கும் சூழ்நிலை உருவானதால் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் சிம்ரன்: அந்தவகையில் வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை என அவரது செகண்ட் இன்னிங்ஸ் நன்றாகவே ஆரம்பித்தது. இந்த முறையும் கதை மற்றும் கதாபாத்திர தேர்வில் ரொம்பவே கவனமாக இருந்து சிக்ஸர் அடித்துவருகிறார். இந்த வருடத்தில் அவர் நடித்திருந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஈழ தமிழ் பேசி சிம்ரன் நடித்து அசத்தியிருந்தது அனைவரையுமே ரசிக்க வைத்தது.
ட்ரெண்டாகும் சிம்ரன் பேட்டி: இந்நிலையில் சிம்ரன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமீபத்தில் தனியார் ஊடகத்திடம் பேசிய அவர், "இந்த ஆண்டில் டூரிஸ்ட் ஃபேமிலி, டிராகன், 3 BHK ஆகிய படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலிலும் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றன. இந்தப் படங்கள் வெளியாகி ஒரு வாரம் கழித்து தியேட்டர்களுக்கு சென்று பார்த்தாலும் அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பெரிய ஹீரோக்கள் மீது அட்டாக்?: ஆனால் பெரிய ஸ்டார்கள் நடித்த படங்கள் பல கோடி ரூபாய் வசூல் செய்ததாக சோஷியல் மீடியாவில் அறிவிக்கிறார்கள். படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து தியேட்டர்களுக்கு சென்றால் அங்கே கூட்டமே இல்லை. சீட்கள் எல்லாம் காலியாக இருக்கின்றன. மக்கள் கூட்டமே இல்லாமல் வசூலில் மட்டும் பெரிய சாதனை என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்ற ஆச்சரியம் எனக்கு இருக்கிறது" என்றார். சிம்ரனின் இந்தப் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த வருடத்தில் தக் லைஃப், குட் பேட் அக்லி, விடாமுயற்சி, கூலி, ரெட்ரோ என பெரிய நட்சத்திரங்கள் நடித்த எந்தப் படமும் விமர்சன ரீதியாக பெரும்பாலும் கொண்டாடப்படவில்லை. கழுவி கழுவிதான் ஊற்றினார்கள். ஆனாலும் அந்தப் படங்கள் எல்லாம் நூறு கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக போஸ்டர்கள் வெளியாகின என்பது நினைவுகூரத்தக்கது. இப்போது சிம்ரன் போன்ற பெரிய நட்சத்திரம் இதுகுறித்து ஓபனாக வாய் திறந்திருப்பதால் இனிமேலும் இதுபோன்ற பித்தலாட்ட போஸ்டர்களும் அறிவிப்பும் வருவது குறையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











