எய்ட்ஸா?-தயாரிப்பாளர் மீது சிம்ரன் கோபம்!
மலையாளத்தில் தான் நடித்த ஹார்ட் பீட்ஸ் படத்தில் தன்னை எய்ட்ஸ் நோயாளியாகவும், எய்ட்ஸுக்குத் தான் பலியாவது போலவும் தயாரிப்பாளரும், இயக்குநரும் சித்தரித்திருப்பதால் சிம்ரன் கடும் கோபமடைந்துள்ளார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது வழக்குப் போடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கல்யாணம் செய்து கொண்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்ட சிம்ரன் தமிழில் தீவிரமாக வாய்ப்புகள் தேடி வருகிறார். ஆனால் யாரும் வழங்கத்தான் காணோம். வெறும் விளம்பரப் பட வாய்ப்புகள்தான் வருகின்றன.இந்த நிலையில்தான் மலையாளத்தில் ஹார்ட் பீட்ஸ் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது சிம்ரனுக்கு. இதில் புதுமுகங்கள் நிறைய நடித்துள்ளனர். இப்படத்தில் சிம்ரனை எய்ட்ஸ் நோயாளியாக காட்டியுள்ளனர். கடைசியில் எய்ட்ஸுக்கு சிம்ரன் பலியாவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இது சிம்ரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம், இப்படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறி விட்டாராம் சிம்ரன். இந்த நிலையில் தனது கேரக்டரை எய்ட்ஸுக்குப் பலியாவது போல வடிவமைத்துள்ளதை அறிந்து கடும் கோபம் அடைந்துள்ளார் சிம்ரன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இப்படத்தின் கதை வித்தியாசமானதாக இருந்ததால் நடிக்க சம்மதித்தேன். ஆனால் படப்பிடிப்பின்போது கதையின் போக்கை மாற்றி எடுக்க ஆரம்பித்தனர். இதனால் நான் அதிருப்தி அடைந்தேன்.
தொடர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விலகிக் கொண்டேன். இந்த நிலையில் படத்தில் எனது கேரக்டரை எய்ட்ஸ் நோயாளி போலவும், நான் கடைசியில் எய்ட்ஸுக்குப் பலியாவது போலவும் காட்டியுள்ளதாக பலர் என்னிடம் கூறினர். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. எனது கதாபாத்திரத்தை எய்ட்ஸுக்குப் பலியாவது போல காட்டியிருந்தால் நான் தயாரிப்பாளர் ஜாலி வசந்த்தையும், இயக்குநர் வினு ஆனந்த்தையும் சும்மா விட மாட்டேன். அவர்கள் மீது வழக்கு தொடருவேன்.
படத்தின் கதையை என்னிடம் கூறியபோது எனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கேரக்டர் சித்தரிக்கப்படவில்லை. இதுதொடர்பான படத்தின் ஒரிஜினல் கதை என்னிடம் உள்ளது. எனவே இயக்குநரும், தயாரிப்பாளரும் தப்பிக்க முடியாது என்றார் சிம்ரன் ஆவேசமாக.
அடப் பாவமே!


Click it and Unblock the Notifications











