நம்பவே முடியல அதுக்குள்ள உனக்கு இவ்ளோ வயசாகிடுச்சு.. மகனை பார்த்து பூரித்துப்போன சினேகா!
சென்னை: நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு ஒரு விஹான் எனும் மகன் மற்றும் ஒரு ஆத்யாந்தா எனும் மகள் உள்ளனர். இந்நிலையில், மகனின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய சினேகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. அவரது சிரிப்பழகை பார்த்த ரசிகர்கள் கே.ஆர். விஜயாவுக்குப் பிறகு புன்னகை அரசி என்ற பட்டத்தையே அவருக்கு கொடுத்தனர்.

ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்மந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, வசீகரா, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சினேகா 43 வயதாகும் நிலையிலும், தொடர்ந்து நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யுடன் இணைந்து இவர் நடித்த கோட் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சினேகா மகன் பிறந்தநாள்: நடிகை சினேகா தனது மகன் விஹானின் பத்தாவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது. மகனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்த சினேகா, "இன்று உனது பத்தாவது பிறந்தநாள். 'லட்டு' நீ உன் வாழ்வின் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்க. பத்து ஆண்டுகள் கடந்துவிட்டதை நம்பவே முடியவில்லை.
நேற்றைய தினம் போல் கைக்குழந்தையாக இருந்தவன், இப்போது அறிவும் கருணையும் நிறைந்த ஒரு சிறுவனாக வளர்ந்து வருவது சந்தோஷத்தை தருகிறது. 'லட்டு' தன் வாழ்வில் மிகவும் சிறப்பானவன், அவனை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று கூறியுள்ளார்.
அவன் ஒரு நல்ல இதயம் கொண்டவன் என்றும், அவன் சிரிப்பு குடும்பத்தினரின் உலகத்தை ஒளிரச் செய்யும் என்றும் பதிவிட்டுள்ளார். லட்டு சிந்தனை, வீரம், நகைச்சுவை மற்றும் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் என அனைத்திலும் சிறந்து விளங்குவதாக சினேகா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அவன் மீதான அன்பு முடிவற்றது என்றும், கஷ்டமான நாட்களில் கூட, குடும்பத்தினருக்கு சூரிய ஒளி போன்றவன் என்றும் கூறியுள்ளார். அவன் தான் மகிழ்ச்சிக்கான காரணம் எனவும், கிடைத்த ஒரு பெரிய ஆசீர்வாதம் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு வயதானாலும் அவன் எப்போதும் சிறிய பையனாகவே இருப்பான் என்று குறிப்பிட்ட சினேகா. குடும்பத்தினர் எப்போதும் அவனுக்கு ஆதரவாகவும், வழிகாட்டியாகவும், அளவில்லா அன்பை பொழியும் விதமாகவும் இருப்பார்கள் என்று உறுதியளித்தார்.
அவனுடைய கனவுகள் சிறகடித்து உயரவும், சிரிப்பு ஒருபோதும் நிற்காமலும், அன்பு எப்போதும் அவனைச் சூழ்ந்திருக்கவும் வாழ்த்தியுள்ளார் சினேகா. மகன் அப்படியே குட்டி பிரசன்னா மாதிரியே இருக்கான் என்றும் அம்மா சினேகாவின் அன்பு அளவில்லாத ஒன்று என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டிராகன் படத்திலும் சினேகா கேமியோ ரோலில் நடித்திருந்தார். கோட் படத்தை தொடர்ந்து மீண்டும் டாப் நடிகர்களுடன் சினேகா நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











