திருமணத்துக்கு பின் உற்சாகம்..கணவர் நாக சைதன்யாவுடன் ஹனிமூன் சென்ற சோபிதா துலிபாலா.. எங்கே தெரியுமா?
ஹைதராபாத்: பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலால்; தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சைதன்யா நடித்த தண்டேல் திரைப்படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூல் செய்தது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் சைதன்யாவும், சோபிதாவும் வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன.
நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துவந்தார். சூழல் இப்படி இருக்க திடீரென இரண்டு பேரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார்கள்.
இரண்டாவது காதல்: சமந்தாவை பிரிந்த பிறகு சில காலம் சிங்கிளாக இருந்தார் நாக சைதன்யா. அதனையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். முதலில் அவர்கள் தங்களது காதலை ரகசியமாகத்தான் வைத்திருந்தார்கள். அடிக்கடி இரண்டு பேரும் வெளிநாடுகளில் இருக்கும் புகைப்படங்கள் கசிந்தன. அப்போதும் சோபிதாவோ, சைதன்யாவோ தங்களுக்குள் இருக்கும் காதலை வெளியே சொல்லவில்லை. ஒருவழியாக இரண்டு பேரின் காதலும் உறுதியானதை அடுத்து வீட்டிலிருந்து க்ரீன் சிக்னலும் கிடைத்தது.
திருமணம்: வீட்டு சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் கடந்த வருடம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் பிற துறை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பிறகு இரண்டு பேருமே ஒருவர் மீது ஒருவர் மரியாதை, அன்பு உள்ளிட்டவற்றை வைத்து வாழ்க்கையை நிம்மதியாக நகர்த்திவருகிறார்கள்.

முதல் வெற்றி: சைதன்யாவின் இரண்டாவது திருமணத்துக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான படம்தான் தண்டேல். சந்தூ மொன்டேட்டி இயக்கியிருந்த அந்தப் படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். மீனவ சமுதாயத்தையும், காதலையும் மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டு நூறு கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சியில் குடும்பம்: நாக சைதன்யா இத்தனை வருடங்கள் திரைப்படங்களில் நடித்தாலும் அவர் நடித்த எந்த ஒரு படமும் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது இல்லை. ஆனால் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்த பிறகு வெளியான தண்டேல் திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இதனால் எல்லாம் சோபிதா வந்த நேரம்தான் என்று குடும்பத்தினர் உற்சாகத்தில் மிதந்துகொண்டிருப்பதாக தெலுங்கு திரையுலகிலிருந்து தகவல்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.

வெளிநாட்டில் ஜோடி: திருமணம் முடிந்த கையோடு தண்டேல் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தார் நாக சைதன்யா. இதன் காரணமாக மனைவியுடன் அதிக நேரம் செலவிடமுடியவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் தண்டேல் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தோடு தனது மனைவி சோபிதா துலிபாலாவுடன் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஜாலி டூர் அடித்திருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்களை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவை ட்ரெண்டாகியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











