ஹோட்டலில் ஒரு ஃப்ளோர்.. சம்பளம் எக்கச்சக்கம்.. பாகுபலியில் நடிக்க ஸ்ரீதேவி போட்ட கண்டிஷன் தெரியுமா?
சென்னை: நடிகை ஸ்ரீதேவி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று ஆட்சி செய்தவர். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு குஷி, ஜான்வி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களும் திரைத்துறையில் ஜொலித்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகுபலி படத்தில் ஸ்ரீதேவி நடிப்பதற்கு மறுத்ததற்கான காரணத்தை தயாரிப்பாளர் போனி கபூர் இத்தனை வருடங்கள் கழித்து வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழில் திரை பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீதேவி தென்னிந்திய மொழிகளில் பல வருடங்களாக டாப் ஹீரோயினாக இருந்தார். அவர் மார்க்கெட்டில் இருந்தவரை வேறு எந்த நடிகையும் அவரது இடத்தை தொடக்கூட முடியவில்லை. அத்தனை ஹீரோக்களும் ஒரு படத்திலாவது அவருடன் நடித்துவிடமாட்டோமா, ரொமான்ஸ் செய்துவிடமாட்டோமா என்று ஏங்கிய கதையெல்லாம் திரைத்துறையில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்.
பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கலக்கிவந்த அவருக்கு பாலிவுட் வாய்ப்புகளும் வரிசைகட்டி வந்தன. உடனே அங்கு சென்ற அவர் தனது திறமை மற்றும் அழகால் அங்கும் தனது கொடியை உயர பறக்கவைத்தார். தென்னிந்திய ஸ்டார்கள் எப்படி ஸ்ரீதேவியுடன் நடித்துவிடமாட்டோமா என்று ஏங்கினார்களோ அதே நிலைமைதான் பாலிவுட் ஸ்டார்களுக்கும் ஏற்பட்டது.

திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி: பாலிவுட்டில் அவர் பீக்கில் இருந்தபோது சில காதல் கிசுகிசுக்களில் சிக்கினாலும் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். போனி கபூருக்கு அது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தம்பதிக்கு பிறந்தவர்கள்தான் இப்போது நடிகைகளாக ரவுண்டு வந்துகொண்டிருக்கும் குஷி கபூரும், ஜான்வி கபூரும். ஜான்வியும் தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் அவர் உயிரிழந்துவிட்டார். இதற்கிடையே தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் நடிப்பதை நிறுத்தியிருந்த ஸ்ரீதேவி விஜய் நடித்த புலி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதற்கு பிறகு அவர் நடிக்கவில்லை. அதேசமயம் பாகுபலி படத்தில் ராஜமாதா கேரக்டரில் நடிக்க முதலில் அவரிடம்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் அந்தப் படத்தில் ஸ்ரீதேவி நடிக்காததற்கான காரணம் குறித்து அவரது கணவர் போனி கபூர் பேசியிருக்கிறார்.
என்ன காரணம்?: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி கேரக்டருக்கு ஸ்ரீதேவியைத்தான் நடிக்க வைக்க ராஜமௌலி விரும்பினார். அதேசமயம் நடிக்காததற்கு ராஜமௌலி மட்டுமே காரணமில்லை. படத்தின் தயாரிப்பாளர்கள்தான் காரணம். ஸ்ரீதேவி வாங்கும் சம்பளத்தைவிடவும் குறைவான சம்பளத்தை கொடுக்க முன்வந்தார்கள். அதனால் விலகும் சூழ்நிலை உருவானது. அதேபோல் ஹோட்டலில் ஒரு ஃப்ளோர் கேட்டதும் உண்மைதான். அப்போது எங்களது மகள்கள் சிறிய வயது. எனவே அவர்களுடைய வசதிக்காகத்தான் கேட்டோம்.
நியாயமான கோரிக்கை: நாங்கள் அப்படி கேட்டது நியாயமான கோரிக்கைதான். ஆனால் நாங்கள் தனி ஃப்ளோர் கேட்டதை ராஜமௌலியிடாம் தயாரிப்பாளர்கள் ஒன்றுக்கு இரண்டாக சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் ஸ்ரீதேவிக்கு வாய்ப்புகள் எதுவும் வராமல் இல்லை. அவருக்கான டிமாண்ட நன்றாகத்தான் இருந்தது. அப்படி இருக்கும்போது ஏன் குறைந்த சம்பளத்துக்கு நடிக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











