மணிரத்னத்திடம் அப்படி இருப்பது நல்லது..எந்த பிரயோஜனமும் இல்ல..சுஹாசினி இப்படி ஓபனா சொல்லிட்டாங்க?
சென்னை: மணிரத்னம் இந்திய சினிமாவின் ஆளுமைகளில் ஒருவர். நாடு முழுவதும் அவரது படங்களுக்கும், அவருக்கும் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் அவர். இப்போது தக் லைஃப் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படமானது ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கிறது படம். நேற்றுதான் அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அப்ளாஸை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியவர்களில் மணிரத்னத்தின் பங்கு தவிர்க்கவே முடியாது. பாலுமகேந்திரா, மகேந்திரன் உள்ளிட்டோர் மௌனங்களை மொழியாக்கியவர்கள். மணிரத்னம் அந்த மௌன மொழியில் ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டுமே சேர்த்து அந்த மௌன மொழியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றவர்.
சிறிய வசனம் பெரிய வீரியம்: மணிரத்னத்தை ஃப்ரெஞ்ச் பியர்ட் வைத்த வள்ளுவர் என்று சொல்லலாம். ஒன்றரை அடியில் வள்ளுவர் எப்படி பல விஷயங்களை சொல்லி சென்றிருக்கிறாரோ அதுபோல் மணி சில வரிகளில் மாஸ் மேஜிக்கை நிகழ்த்திவிடுவார். அவரது ஒவ்வொரு காட்சியமைப்பும் சினிமா மீது காதல் கொண்டவர்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டுபோய் நிறுத்தும். நாயகன் படத்தில் கமல் பேசிய, நான் அடிச்சா நீ செத்துடுவ என்ற டயலாக்கிற்குள் அவ்வளவு மாஸ் இருக்கும்.
கலந்து கொடுப்பதில் வல்லவர்: பகல் நிலவு படத்தின் மூலம் அறிமுகமாகி தோல்வியை சந்தித்தாலும் ஏதோ ஒன்று ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதே என்று ரசிகர்களை நினைக்க வைத்தவர். உண்மை கதைகளை எடுப்பதில் எப்போதுமே சிக்கல் என்று நினைத்த இயக்குநர்கள் மத்தியில் அதனை ரொம்பவே லாவகமாக செய்துகாட்டியவர் மணிரத்னம். பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை அடிப்படையாக வைத்து அவர் உருவாக்கிய பம்பாய் படத்தை உதாரணமாக சொல்லலாம். மிகப்பெரிய சென்சிட்டிவ்வான சப்ஜெக்ட்டை காதலையும், எமோஷனையும் கலந்து கொடுத்திருப்பார்.
அனைவருக்குமே மணி சார்தான்: இயக்குநர்களின் பெயர் அவர்களுக்கு பெரிய அடையாளத்தை கொடுக்கக்கூடியவை. பொதுவாக எந்த இயக்குநராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைக்கப்படுவார்கள். ஆனால் மணிரத்னத்தை மட்டும்தான் மணி சார் என்று அழைப்பார்கள். அதற்கு காரணம் அவரது படங்கள் மட்டுமில்லை அவரது செயல்களும்தான். எப்போதும் அமைதிகொள்ளும் முகத்தை வைத்துக்கொண்டு சின்ன சிரிப்பை உதிர்த்துக்கொண்டு நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் என அடர்த்தியான கதைக்களங்களை எளிமையான உணர்வோடு ரசிகர்களுக்கு கொடுப்பது அவருக்கு மட்டுமே தெரிந்த மேஜிக்.
பொன்னியின் செல்வன்: பொதுவாக ஒரு நாவலை சினிமாவாக எடுப்பது இயக்குநர்களுக்கு மிகப்பெரிய வேலைதான். அதை வெற்றிமாறன் இப்போது தொடர்ச்சியாக செய்து எளிமைப்படுத்தியிருக்கிறார். அதேசமயம் மணிரத்னம் அதற்கான விதையை போடுவதில் எப்போதுமே ஆர்வமாக இருந்தவர். பொன்னியின் செல்வனை திரையில் பார்க்க முடியுமா என்று தமிழர்கள் ஏங்கிக்கொண்டிருக்க அதை எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்தும் சாத்தியமாக்கவில்லை. ஆனால் மணிரத்னம் அதனை சாத்தியமாக்கினார். இருப்பினும் படத்துக்கு ஓரளவு மட்டுமே வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப்: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களுக்கு பிறகு இப்போது அவர் கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படமானது ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்திலிருந்து வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் சிங்கிளும், ட்ரெய்லரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. முக்கியமாக ஏற்கனவே மணிரத்னமும், கமல்ஹாசனும் இணைந்து நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த முறையும் அந்தக் கூட்டணி தரமான படத்தை கொடுக்கும் என்கிற உச்சக்கட்ட நம்பிக்கை கமல் மற்றும் மணிரத்னம் ரசிகர்களிடையே அதிகமாகவே இருக்கிறது.
சுஹாசினி பேட்டி: இதற்கிடையே அவர் நடிகையும், கமலின் சகோதரர் மகளுமான சுஹாசினியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரும் இயக்குநராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மணிரத்னம் குறித்து சுஹாசினி அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "மணிரத்னத்துக்கும் எனக்கும் சரியான புரிதல் இருப்பது இசையில்தான். எங்களை இசைதான் இணைக்கும். ஏதேனும் ஒரு கூட்டத்தில் இருக்கும்போது எனக்கு பிடித்த பாடல் ஒலிபரப்பப்பட்டால் என்னை தேடி பிடித்து உனக்கு பிடித்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்துவார். அதேபோல்தான் நானும் செய்வேன்.

ஈசியாக எடுத்துக்கொள்வார்: அவர் எல்லா விஷயங்களையுமே ரொம்பவே ஈஸியாக எடுத்துக்கொள்வார். நான் அவரிடம் சண்டை போட வேண்டும் என்ற முடிவோடு சென்றால் அந்த சூழ்நிலையையே காமெடியாக மாற்றிவிடுவார். எங்கள் தலையில் இடியே விழக்கூடிய விஷயமாக இருந்தாலும்கூட அதை காமெடியாக மாற்றிய தருணங்கள் எல்லாம் நிறையவே உண்டு. எங்கள் இரண்டு பேருக்கும் இடையே சினிமா ரொம்பவே நெருக்கமான பந்தமாக இருக்கிறது. சினிமாவின் அனைத்து கோணங்களிலிருந்தும் நாங்கள் பேசுவோம்.ஒரு இயக்குநருடைய மனைவியாக இருக்கும் ஒருவர் அவரது வேலையை விமர்சனம் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. அதேபோல் கணவரை பற்றி அடுத்தவரிடம் மிக மிக பெருமையாகவும் பேசக்கூடாது. இரண்டு விஷயங்களை எப்போதும் நான் செய்யவே மாட்டேன்.
நம்பிக்கையை கொடுக்க வேண்டும்: நம்முடைய துணையானவர் நமது பக்கத்தில்தான் இருக்கிறார். நமது எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கிறார் என்கிற நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அந்த நம்பிக்கை என் மீது அவருக்கும் அவர் மீது எனக்கு நன்றாக இருக்கிறது. என்னுடைய வேலைகளில் அவர் பெரிதாக தலையிடமாட்டார். ஏனெனில் அதை கவனிக்கக்கூடிய அளவுக்குக்கூட நேரம் இல்லாமல் அவர் அவருடைய வேலைகளில் முழுவதுமாக மூழ்கிவிடுவார். அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எப்போதாவதுதான் பார்ப்பார். அந்த சுதந்திரத்தை நான் அவருக்கு கொடுத்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை ஒரு கணவர் வேலைக்கு அவசரமாக சென்றுகொண்டிருக்கும்போது காஃபி குடித்துவிட்டு செல்லுங்கள் சொல்லும் மனைவி நல்ல மனைவி கிடையாது. நீங்கள் போகும் இடத்தில் காஃபி கிடைக்கும்தானே என்று கேட்பவர்தான் நல்ல மனைவி. சின்ன சின்ன விஷயங்களில் கட்டுப்பாட்டோடு இருந்துவிட்டு பெரிய விஷயங்களை விடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
முதலில் அப்படித்தான் சொல்வார்: ஏதாவது ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன் என்று அவரிடம் நான் சென்று சொன்னால்; செய்யாதே என்றுதான் முதலில் சொல்வார். ஏனெனில் அதைவிட பெரிய விஷயங்களை நான் செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பார். அதன் காரணமாகவே ஒரு வேலை பற்றி அவரிடம் சொல்ல வேண்டுமென்ற சூழ்நிலை வந்தால் அந்த வேலையை பாதி முடித்த பிறகுதான் அவரிடம் சொல்வேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











