ஐஸ்வர்யா மகளுக்கு அப்படியே அம்மாவோட கண்கள்!
ஐஸ்வர்யா ராய்க்கு மும்பை மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். இது சுகப் பிரசவம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது பேத்தி குறித்து தாத்தா அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் விலாவாரியாக எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எப்போதாவது தனது கண்களை லோசாக திறந்து பார்க்கிறாள் எனது பேத்தி. அப்படியே அவளுடைய தாயாரின் கண்களைப் போலவே எனது பேத்தியின் கண்களும் உள்ளன. மிகப் பிரகாசமான கண்களாக அவை வரும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் அமிதாப்.
ஐஸ்வர்யாவின் ஸ்பெஷாலிட்டியே அந்தக் கண்கள்தான். அவருடைய தாயார் விருந்தா ராய்க்கும் கூட அதேபோன்ற கண்கள்தான். தற்போது ஐஸ்வர்யாவின் மகளுக்கும் அதே கண்கள் வந்துள்ளது ஐஸ்வர்யா குடும்பத்தினரை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமிதாப்பச்சன் மேலும் கூறுகையில், எனது பேத்தியை நான் கையில் வாங்கிக் கொண்டு வந்தபோது எனக்கு எனது மகன் அபிஷேக்கின் நினைவு வந்தது. அப்போதும் அப்படித்தான் அபிஷேக் பிறந்தபோது அவனை எனது தந்தையின் கைகளில் கொடுத்தேன். இப்போது எனது கையில் அபிஷேக்கின் மகள். பெருமையாக இருக்கிறது.
எனது மருமகள் மிகவும் தைரியசாலி. பிரசவத்திற்குப் முன்னரும் சரி, பின்னரும் சரி மிகவும் தைரியமாக, பயப்படாமல் இருந்தார். மன தைரியம் அவருக்கு மிக அதிகம். மிகுந்த மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார்.
இப்ப, எங்க குடும்பத்தில் நடந்து வரும் பெரிய விவாதமே, குட்டிப் பெண் யாருடைய சாயலில் இருக்கிறாள் என்பதுதான் என்று தனது ஸ்டைலில் முடித்துள்ளார் பச்சன்.


Click it and Unblock the Notifications












