நடிகை இனியா வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை: நகைகளும் களவு போனது
திருவனந்தபுரம்: நடிகை இனியா வீட்டில் 10 பவுன் நகைகளும், ரூ.5 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நடிகை இனியா நடித்த 'வாகை சூடவா' படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து 'மௌனகுரு' கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒருநாள், 'மாசாணி', 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை இனியாவின் வீடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இனியாவுக்கு கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு இல்லாததால் குடும்பத்தினருடன் வீட்டில் வசித்து வருகிறார். இவரது சகோதரிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக நகைக்கடைக்கு சென்று நகைகள் வாங்கி வீட்டில் வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த தியேட்டர் ஒன்றுக்கு இனியாவும், குடும்பத்தினரும் இரவு காட்சி படம் பார்க்க சென்றனர். வீட்டை பூட்டி விட்டு சென்று இருந்தார்கள். படம் முடிந்து வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளைபோய் இருந்தது. ரூ.5 லட்சம் ரொக்க பணத்தையும், பத்து பவுன் நகைகளையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றிருந்தனர். இதனால் இனியாவும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து இனியாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications












