காணாமல் போகும் கதாநாயகிகள்.. இந்த ஆண்டு இதுவரை ஒரு படம் கூட இல்லை.. டாப் நடிகைகளுக்கே இந்த நிலைமையா?
சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக டாப் நடிகைகளாக வலம் வந்துக் கொண்டிருந்த முன்னணி நடிகைகளுக்கே சமீப காலமாக பட வாய்ப்புகள் மொத்தமாக முடக்கப்பட்டு வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நடிகர்கள் வரிசையில் பார்த்தால் 50 ஆண்டுகளை கடந்தும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லாம் இந்த வருஷமும் இன்னும் சில ஆண்டுகளுக்கு சேர்த்தே பிசியாக உள்ளனர்.
விஜய், அஜித் குமார், சூர்யா, சியான் விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என நடிகர்கள் பட்டியலில் எந்தவொரு குறையுமின்றி பட வாய்ப்புகள் அவர்களுக்கு வரிசைக் கட்டி நிற்கின்றன. ஒரு வருஷத்துக்கு சிலர் 3 படங்கள் கூட வெளியிடுவார்கள் போல தெரிகிறது.

ஆனால், சில முன்னணி நடிகைகளுக்கே தமிழ் சினிமாவில் திடீரென என்ன ஆனது என தெரியவில்லை. 2025ம் ஆண்டு பாதியை கடக்கவுள்ள நிலையிலும் இதுவரை ஒரு தமிழ்ப் படம் கூட ரிலீஸ் ஆகாத சூழல் நிலவி வருகிறது. இதில், ஒரு சில நடிகைகள் பக்கத்து ஸ்டேட் படங்களில் பிசியாகி வந்தாலும் கோலிவுட்டில் கோட்டை விட்டுத்தான் வருகின்றனர். அப்படி இந்த ஆண்டு இதுவரை ஒரு படத்தைக் கூட இதுவரை ரிலீஸ் செய்யாத டாப் 5 நடிகைகள் குறித்து தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
கீர்த்தி சுரேஷையே காணோமே: கடந்த ஆண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் ரொம்பவே பிசியாக இருந்து வந்தார். ஆனால், இந்த ஆண்டு இதுவரை அவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. கோவாவில் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கடந்த ஆண்டு தமிழில் அவர் நடித்த சைரன் மற்றும் ரகு தாத்தா உள்ளிட்ட 2 படங்களுமே அவருக்கு படுதோல்வி படங்களாக மாறின.
பாலிவுட்டில் அறிமுகமாக வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவருக்கு அட்லீ தயாரிப்பில் பேபி ஜான் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படமும் ஃபிளாப் ஆனதால், தனது அடுத்த படமான ரிவால்வர் ரீட்டா படத்தைக் கூட ரிலீஸ் செய்ய முடியாத சூழலில் இருந்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் கைவசம் தமிழில் ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி உள்ளிட்ட படங்கள் இருந்தாலும், எந்தவொரு முன்னணி நடிகருடனும் ஜோடி போட்டு நடிக்க முடியாத சூழலில் தான் நடிகையின் நிலைமை உள்ளது.

சங்கடத்தில் சமந்தா: காதலித்து திருமணம் செய்துக் கொண்ட கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்ததில் இருந்தே மனதளவில் உடைந்துப் போய்விட்டார் நடிகை சமந்தா. மேலும், அவரை மயோசைடிஸ் நோய் பாதிப்பு தாக்கிய நிலையில், தொடர்ந்து பல பெரிய பட வாய்ப்புகளும் அவரை விட்டு சென்றுவிட்டது. இந்த ஆண்டு சமந்தா தயாரிப்பில் வெளியான 'சுபம்' எனும் தெலுங்கு படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
ஆனால், அந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை. அடுத்து சொந்த தயாரிப்பிலேயே 'மா இன்டி பங்காரம்' படத்தில் நடிக்கவுள்ளதாக அவரே சமீபத்தில், நடைபெற்ற 'சுபம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். கடந்த ஆண்டு சமந்தா பிறந்தநாளுக்கு அந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இன்னமும் அந்த படம் ஆரம்பிக்கவில்லை என்பது சமந்தா ரசிகர்களை நிச்சயம் சோகத்தில் ஆழ்த்தத்தான் செய்கிறது.

பிஸியாக இல்லாத பிரியங்கா மோகன்: கோலிவுட்டில் அடுத்தடுத்து மமிதா பைஜு, கயாடு லோஹர் என இளம் நடிகைகள் வந்ததும் இளைஞர்களின் கிரஷ்ஷாக இருந்த பிரியங்கா மோகனை தமிழ் சினிமா கண்டுக்காமல் விட்டுவிட்டதோ என்கிற கேள்வி தான் எழுகிறது. நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரியங்கா மோகன் கடந்த ஆண்டு கேப்டன் மில்லர், பிரதர் என பேக் டு பேக் ஃபிளாப் கொடுத்த நிலையில், அதன் பிறகு அவருக்கு தமிழில் ஒரு படம் கூட இன்னமும் அமையவில்லை. தனுஷ் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் இடம்பெற்ற "கோல்டன் ஸ்பேரோ" பாடலில் மட்டுமே கேமியோ ரோலில் எட்டிப் பார்த்திருந்தார். தெலுங்கில் பவன் கல்யாண் உடன் ஓஜி படத்தில் நடித்து வரும் அவர், மற்ற யங் ஹீரோயின்கள் போல பிசியாக இல்லை என்கின்றனர்.

பிரியா பவானி சங்கருக்கு என்ன ஆச்சு?: பிரியங்கா மோகனை போலவே கடந்த ஆண்டு பிசியாக இருந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கரும். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானார். அழகும் அறிவும் கொண்ட நடிகையான பிரியா பவானி சங்கர் கடந்த ஆண்டு விஷாலின் ரத்னம், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2ம் ஜீவாவுடன் இணைந்து பிளாக் மற்றும் அருள்நிதி நடித்த டிமான்ட்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
ஆனால், இந்த ஆண்டு 5 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில், அவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஒருவேளை இந்தியன் 3 திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி மாதம் வெளியாகி இருந்தால் அந்த படத்தில் அவரை ரசிகர்கள் பார்த்திருக்கலாம். புதிதாக ஒரு சில நடிகைகள் வந்ததும் நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் குறிப்பிட்ட அந்த நடிகைகள் பின்னாடியே செல்வதால் தான் மற்ற ஹீரோயின்களுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் போகும் நிலை உள்ளது என சில பிரபல நடிகைகளே ஓபனாக பேட்டிகளில் கூறியுள்ளனர்.

ஹன்சிகா ஆளே காணோம்: சிம்ரன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட சீனியர் நடிகைகளே இன்னமும் தமிழ் சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். ஆனால், நடிகை ஹன்சிகா திருமணத்துக்குப் பிறகு உமன் சென்ட்ரிக் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த படங்கள் எல்லாம் அவருக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில், அவர் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் 'ரவுடி பேபி' படமும் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்களுக்கே தமிழ் சினிமாவில் திடீரென இப்படியொரு நிலைமை வர என்ன காரணம் என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மற்ற மொழிப் படங்களிலும் இவர்களுக்கு நடிக்க பெரிதாக வாய்ப்புகள் வராமல் குறைந்து வரும் சூழலில் தொடர்ந்து இந்த துறையில் நீடிப்பார்களா? என்கிற அச்சமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











