இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. ஆனால், ஒரு தென்னிந்திய நடிகை கூட இல்லையே?
சென்னை: இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை சமீபத்தில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், முழுவதுமே பாலிவுட் நடிகைகளின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. நயன்தாரா உள்ளிட்ட எந்த ஒரு தென்னிந்திய நடிகையின் பெயரும் இடம் பெறவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா ஒரு படத்துக்கு அதிகபட்சமாக 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நயன்தாரா இந்த லிஸ்டில் இல்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் டாப் இடங்களை தமிழ் சினிமா நடிகர்கள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி உள்ளிட்ட யாருமே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதல் ஐந்து இடத்துக்குள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்: இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களாக ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய், பிரபாஸ் மற்றும் அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் ஒரு படத்துக்கு அதிகபட்சமாக 150 கோடி முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் இடத்தில் ஷாருக்கானும், இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்த் மற்றும் மூன்றாம் இடத்தில் விஜய் உள்ளனர் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீபிகா படுகோன்: நடிகைகளில் முதல் இடத்தை தீபிகா படுகோன் பிடித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு படத்துக்கு 15 முதல் 30 கோடி வரை அவர் சம்பளம் வாங்கி வருவதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது . அவரை இதைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தில் கங்கனா ரனாவத் உள்ளார். 15 முதல் 27 கோடி ரூபாய் வரை கங்கனா ரனாவத் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
பிரியங்கா முதல் ஆலியா பட் வரை: இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிரியங்கா சோப்ரா பிடித்துள்ளார். 15 முதல் 25 கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் வாங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது இடத்தில் கத்ரீனா கைஃப் அதேபோல 15 முதல் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறுகின்றனர். ஐந்தாவது இடத்தில் நடிகை ஆலியா பட் 10 முதல் 20 கோடி வரை ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கி விடுவதாக ஃபோர்ப்ஸ் அறிவித்துள்ளது. நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு அதிகபட்சமாக ஐந்து முதல் 10 கோடி ரூபாய் வரைதான் சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் அதனால் அவர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் கூறுகின்றனர்.
சம்பளத்தை அதிகரித்தாரா ராஷ்மிகா?: சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்தில் ராஷ்மிகா மந்தனா 15 கோடி வரை சம்பளம் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அவர் 4 கோடி ரூபாய் சம்பளமே தனக்கு இன்னமும் கிடைக்கவில்லை என சம்பளம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது. குறைவான சம்பளத்தை வாங்கும் நடிகைகள் தான் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர் என்றும் அதிக சம்பளம் கேட்கும் நடிகைகள் வருடத்தில் ஒரு படத்தில் நடிப்பதே பெரிய விஷயம் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











