12 ஆண்டுகளுக்குப் பிறகும் ஹீரோயினாகத் தொடரும் த்ரிஷா... சக நடிகைகள் வாழ்த்து!
த்ரிஷா சினிமா உலகுக்கு வந்து பனிரெண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு சக நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
சமீப காலங்களில் சினிமாவில் அதிக ஆண்டுகள் தாக்குப் பிடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் த்ரிஷா.
2002-ல் ‘‘மவுனம் பேசியதே'' படத்தில் சூர்யா ஜோடியாக அறிமுகமானார். அதற்கு முன்பே ஜோடி படத்தில் நடித்தாலும், நாயகியாக மவுனம் பேசியதேதான் முதல் படம்.
அந்த படத்துக்கு பிறகு சாமி, லேசா லேசா, அலை, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம், குருவி, மன்மதன் அம்பு, மங்காத்தா என நிறைய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்தியில் காட்டா மீட்டா படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார்.
தற்போது தமிழில் அஜீத் ஜோடியாக என்னை அறிந்தால், ஜெயம்ரவி ஜோடியாக பூலோகம் படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, அஜீத், விஷால், ஆர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டார். 12 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வருவது திரிஷாவின் சாதனை.
அவரது இந்த சாதனைக்கு சக நடிகைகள் ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












