என்னிடம் மோசமாகப் பேசினார்.. அதனால்தான் தகராறு வந்தது! - த்ரிஷா விளக்கம்

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடிகை திரிஷா ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் வாக்குப்பதிவு செய்ய சென்றார். அப்போது அவருக்கும், வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாக்காளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
திரிஷா வரிசையில் நிற்காமல் ஓட்டுப்போட சென்றதால், இந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி நடிகை திரிஷா விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஓட்டுப்பதிவின்போது என்னை, வரிசையில் நிற்கும்படி சொன்னது தவறல்ல. ஆனால், அந்த வாக்காளர் சொன்ன விதம் மிகவும் மோசம். நடிகையென்றால் அவ்வளவு கேவலமா... இது சரியல்ல.
என்னை வரிசையில் நின்று ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தால் அப்படியே செய்திருப்பேன். அவர் என்னிடம் முரட்டுத்தனமாகப் பேசினார். அதனால் நானும் அதேபோல் பேசவேண்டி இருந்தது. என்னிடம் மென்மையாக பேசுபவர்களிடம் நானும் மென்மையாக பேசுவேன். முரட்டுத்தனமாக பேசினால், நானும் அப்படியே பேசுவேன். அந்த வாக்குச்சாவடியில் இதுதான் நடந்தது. பார்த்தவர்களுக்குத் தெரியும்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











