சர்ச்சை இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறார் திரிஷா?.. ஏன் இந்த விபரீதம் என ரசிகர்கள் கவலை
மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா கடைசியாக அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்துக்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது.
தெலுங்கில் மெகா ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. சேது படத்தின் அப்டேட் வெர்ஷன் என்று அந்தப் படம் கூறப்பட்டாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்களை சேர்த்தது. அந்தப் படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக்கானது. அந்தப் படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி உள்ளிட்டோரை வைத்து சந்தீப் இயக்கிய படம் அனிமல். இந்தப் படம் கடந்த வருடம் ரிலீஸானது.

கடும் விமர்சனம்: படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். படத்தில் அதீத வன்முறை காட்சிகள், ஆணாதிக்கம் என பல எதிர்மறையான விஷயங்கள் இருப்பதாக ரசிகர்கள் கூறினர். விமர்சன ரீதியாக படம் பெருத்த அடியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் 800லிருந்து 900 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

செலிபிரிட்டிகளும் விமர்சனம்: ஆனால் படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்தவர்களே கடுமையான விமர்சனத்தை கொடுத்தனர். பாடகர் ஸ்ரீநிவாஸ், 'அனிமல்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் அனிமல்' என்று கூறியிருந்தார். அதேபோல் நடிகை ராதிகாவும் மறைமுகமாக அனிமலை விமர்சித்திருந்தார். அவர்கள் வரிசையில் கங்கனா ரணாவத்தும் தனது பங்குக்கு, 'பெண்களின் கண்ணியத்தை போக்கும்வகையில் சமீபத்திய படங்கள் வெளியாகின்றன' என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த படம்: இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும் கடந்த வருடம் 6 பிலிம்பேர் விருதுகளை அள்ளியிருக்கிறது அனிமல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இயக்குநர் சந்தீப் ரெட்டிக்கு தாதா சாகேப் விருதும் வழங்கப்பட்டது.இப்போது சந்தீப் ரெட்டி வங்கா தனது அடுத்த பட வேலைகளை தொடங்கியிருக்கிறார். அந்தப் படத்துக்கு ஸ்பிரிட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.
படத்தில் திரிஷா?: இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஸ்பிரிட் படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி இணையும் பட்சத்தில் பிரபாஸும், திரிஷாவும் நான்காவது முறையாக இணைந்து நடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்தத் தகவல் வெளியானதிலிருந்து, அய்யய்யோ சந்தீப் இயக்கத்தில் திரிஷாவா என்னெல்லாம் நடக்கப்போகுதோ.. ஏன் இந்த விபரீதம் என்று கவலையோடு கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











