பிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டுமா?.. திரிஷா என்ன இப்படி சொல்லிட்டாங்க?
சென்னை: திரிஷா இப்போது மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். இடையில் சின்ன சறுக்கலை சந்தித்த அவர் 96, பொன்னியின் செல்வன், லியோ என வரிசையாக நடித்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், விஸ்வம்பரா உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க திரிஷா போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் தோன்றி பிறகு ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா. அறிமுகமான முதல் படத்திலிருந்தே தனது அழகாலும், திறமையாலும் கவனத்தை ஈர்த்து தனக்கென தனியிடத்தை பிடித்தார். அதனையடுத்து முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்த அவர் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தினார். இதன் காரணமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். மேலும் திரிஷா இல்லாத படங்களே இல்லை என்ற நிலைமைதான் உருவானது.

சின்ன சறுக்கல்: தொடர்ந்து பல படங்களில் நடித்த அவருக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. சூழல் இப்படி இருக்க அவருக்கு 96 படம் நல்ல கம்பேக்காக அமைந்தது. அதில் அவர் ஏற்றிருந்த ஜானு கதாபாத்திரம் ரசிகர்களை மீண்டும் அவர் பக்கம் திருப்பியது. ரசிகர்களை மட்டுமில்லை சினிமா இயக்குநர்களையும்தான். அந்தவகையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அசத்தினார் திரிஷா.
மீண்டும் விஜய்யுடன்: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் திரிஷாவின் நடிப்பு கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த அவர்; விஜய்யுடன் பல வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில் இணைந்து நடித்தார். அந்தப் படத்தில் இரண்டு பேரின் கெமிஸ்ட்ரியும் அட்டகாசமாக இருந்தது. அந்தப் படத்துக்கு பிறகு விஜய் நடித்த GOAT படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். அதுவரை திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசையாக படங்கள்: லியோ, GOAT படங்களுக்கு பிறகு இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கமல் ஹாசனுடன் தக் லைஃப், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆக அடுத்த வருடம் திரிஷா நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வரவிருப்பது உறுதியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
திரிஷாவின் போஸ்ட்: இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் போஸ்ட்டில் அவர், "மக்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. நாய்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால்தான் கவலைப்பட வேண்டும். நமக்கு வயதாகும்போதுதான் சேவல்கள் எதற்காக ஒரு நாள் தொடங்குவதற்கு முன்னதாகவே கூவுகின்றன என்பது புரிகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ சமீப காலமாகவே திரிஷா தனது சோஷியல் மீடியாவில் ரொம்பவே தத்துவமாக போஸ்ட் போடுகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











