குழந்தையா இருக்கும்போது பலரும் என்னிடம் தப்பா நடந்துக்கிட்டாங்க.. வரலட்சுமி சரத்குமார் கண்ணீர்!
சென்னை: சூப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி சரத்குமார், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில், நான் குழந்தையாக இருக்கும் போது பலர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள், இதனால், உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கண்ணீர் மல்க பேசி உள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஸ்டாரின் நடிகர் சரத்குமாரின் மகளாக இருந்தாலும், தனது திறமையால் முன்னுக்கு வந்தவர் தான் நடிகை வரலாட்சுமி. இவர், விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சொந்தக்குரலில் பேசி, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டைக்கோழி 2, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் நடிகையாக இருந்தாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

காதல் திருமணம்: நடிகை வரலட்சுமிக்கு கடந்த ஆண்டு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுடன் தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றது. இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், சென்னையில் நடைபெற உள்ள வரவேற்பில், ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், பிரபு, அர்ஜூன், சமந்தா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்களுக்கு கலந்து கொண்டனர். நடிகை வரலட்சுமி, 14 ஆண்டு காலம் நிகோலய் சச்தேவ்வை காதலித்து வந்ததாகவும், அதன் பின் காதலை பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்து கொண்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல், நிகோலய் சச்தேவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும், அவருக்கு 15 வயதில் மகள் இருப்பதாகவும் வரலட்சுமி கூறியிருந்தார்.

பலர் என்னிடம் தவறாக நடந்தார்கள்: திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். அப்போது அதில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், அனைவருடைய வாழ்க்கையில் அம்மா,அப்பா முக்கியமானவர்களாக இருப்பார்கள். ஆனால், என் வாழ்க்கையில் அப்படி யாரும் இல்லை. சின்ன வயதில் என்னை பலர் தவறாக பயன்படுத்தினார்கள் என்று கதறி அழுது பேசினார். அப்போது பேசிய வரலட்சுமி, உன் வாழ்க்கையில் நடந்த அதே விஷயம் என் வாழ்க்கையிலும் நடந்து இருக்கு. என்னுடைய சிறு வயதில் அப்பா அம்மா இரண்டு பேரும் வேலை வேலை என்று சென்றுவிட்டதால், மத்தவங்க வீட்டில் விட்டு விட்டு செல்வார்கள். அப்போது நிறைய பேர் என்னிடம் தவறாக நடந்து இருக்கிறார்கள்.

கதறி அழுத வரவட்சுமி: எனக்கு குழந்தைகள் இல்லை, நான் மற்றவர்களுக்கு சொல்லும் ஒரே விஷயம் குழந்தைகளுக்கு குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லி கொடுத்து வளருங்கள் என்று கதறி அழுதபடி பேசி இருக்கிறார். இந்த ப்ரோமானவை ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. முன்னணி நடிகரின் மகளான வரலட்சுமியே இது போன்று பாதிக்கப்பட்டுள்ளார் என்றால், சாமானியர்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைக்கு என்ன பாதுகாப்பு என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து, வரலட்சுமிக்கு ஆறுதலை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











