ஒவ்வொன்றும் தரமான படம்.. வரலட்சுமி மிஸ் செய்த படங்கள் இவ்வளவா?.. உண்மையில் சோகம்தான்
சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு உச்சக்கட்ட காதலோடு அவர்கள் தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். வரலட்சுமி தொடர்ந்து நடிப்பதற்கு நிக்கோலாய் முழு ஆதரவை கொடுத்துவருகிறார். இந்நிலையில் வரலட்சுமி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி. அவர் அறிமுகமான போடா போடி திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும் அந்தப் படத்தில் அவரது நடிப்பும், நடனமும் பட்டையை கிளப்பின. இதன் காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகளும் வந்தன.ஆனால் அவர் நடித்த தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்கள் எல்லாம் தோல்வியைத்தான் சந்தித்தன. இதற்கிடையே நடிகர் விஷாலை அவர் காதலித்துவருவதாக தகவல்கள் வட்டமடித்தன. மேலும் சரத்குமாருடன் விஷாலுக்கு ஏற்பட்ட மோதலால்தான் இந்த காதல் பாதியில் முறிந்துவிட்டதாகவும் ஒரு கிசுகிசு உண்டு.

நிக்கோலாயுடன் திருமணம்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுடன் வரலட்சுமிக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து சில வருடங்களுக்கு முன்பு தாய்லாந்தில் வைத்து திருமணம் கோலாகலமாக நடந்தது. சரத்தின் இரண்டு மனைவிகளுமே அந்தத் திருமணத்தில் பங்கேற்றது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது.
நிக்கோலாயின் முடிவு: அதேபோல் திருமணத்தை முடித்த கையோடு செய்தியாளர்களை சந்தித்தது அந்த ஜோடி. அப்போது, ' இனி எனது பெயருடன் வரலட்சுமியின் பெயரையும் இணைத்துக்கொள்வேன்' என கூறி நிக்கோலாய் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் நடிகர் சரத்குமாரிடமும் ரொம்பவே அன்யோன்யமாக பழகிவருகிறார். சரத்தும் அடிப்படையில் பாடி பில்டர் என்பதால் இரண்டு பேருக்குமான வேவ் லெங்த் இயல்பாகவே ஒத்துப்போகின்றன.
ட்ரெண்டாகும் வீடியோக்கள்: அவ்வப்போது அவர்கள் குடும்பத்துக்குள் எடுக்கப்படும் வீடியோக்கள் எல்லாம் சென்சேஷனல் ஆகிவிடும். கடந்த பொங்கல் அன்றுகூட சரத்குமார் குடும்பம் குரூப் ஃபோட்டோ எடுத்தபோது; நிக்கோலாயை ஓரமாக நிற்க வைத்து சூர்யவம்சம் திரைப்படத்தின் சீனை ரீ க்ரியேட் செய்திருந்தார்கள். அதேபோல் சாயா தேவியின் பிறந்தநாளுக்கு நிக்கோலாய் பகிர்ந்திருந்த வீடியோவும் ட்ரெண்டானது. இந்நிலையில் வரலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் மிஸ் செய்த படங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
வரலட்சுமி பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்போது எனக்கு 17 அல்லது 18 வயதுதான் இருக்கும். அதேபோல் 7ஜி ரெயின்போ காலனி வந்தது. அப்போதும் இள வயதுதான். மேலும் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படமும் நான் செய்திருக்க வேண்டியது. ஆனால் எனக்கு வயது ரொம்ப குறைவாக இருந்ததாலும்; பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளாததாலும் நான் நடிக்கவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
