நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் விரல்.. ஓட்டை விற்காதீங்க.. வரலட்சுமி சரத்குமார்!
சென்னை: தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தனது இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில், மிகவும் நேர்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளில் அவர் பேசுகிறார்.
தயவு செய்து ஓட்டுப்போடுங்க: நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "ரோடு சரியில்லை, தண்ணீர் இல்லை, கரண்ட் இல்லை என்று ஆயிரத்து எட்டு குறைகளை நாம் தினமும் சொல்கிறோம். ஆனால் அதற்கான பதில் நம்மிடமே இருக்கிறது. நாளைக்கு ஒரு நாள். நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் இந்த ஒரு விரல் தான். நாளைக்கு மறக்காமல் ஓட்டு போடுங்கள். அதன் பிறகு ஐந்து வருடங்களுக்கு யாரிடமும் கேள்வி கேட்காதீர்கள்; ஏனெனில் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். அதனால் உங்கள் சக்தியை காட்ட ஓட்டு போடுங்கள். தயவுசெய்து யாரும் ஓட்டு போட மறந்துவிடாதீர்கள். உங்கள் ஓட்டை விற்றுவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

நாளை தேர்தல்: இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில், வரலட்சுமி சரத்குமார் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியதாக பார்க்கப்படுகிறது. மேலும், பலரும் அவரது இந்த வீடியோவுக்கு ஆதரவு தெரிவித்து, "ஒவ்வொருவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும்" என்ற கருத்தை வலியுறுத்தி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
வரலட்சுமி சரத்குமார்: நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை வரலட்சமி சரத்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் கோமளவல்லி கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடித்து பெயர் எடுத்தார். அந்த படத்தில் வருவது போல, உங்கள் விரல் தான் ஆயுதம் என வரலட்சுமி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications