Actress Kanakalatha Death: பழம் பெரும் நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் திரைத்துறை!
சென்னை: பிரபல மலையாள நடிகை கனகலதா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 63. 360 படங்களுக்கு மேல் நடித்துள்ள கனகலதா, பார்கின்சன் என்ற நடுக்க நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
குணச்சித்திர நடிகையான கனகலதா, 1960 ம் ஆண்டு கொல்லத்தில் பரமேஸ்வரன் பிள்ளை மற்றும் சின்னம்மா தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிக்க வந்தார். பிரியம், கண்ணெழுத்தி போடும் தோட்டு, ஸ்டாலின் சிவதாஸ், வர்ணபகிட்டு, ஸ்படிகம், கிரீடம், ராஜாவின் மகன் போன்ற மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை கனகலதா: தமிழில் இவர், பிரசாந்த் நடித்த உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர்.சி யின் இருட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது நான்கு சதாப்தங்களாக மலையாளம்,தமிழ், தெலுங்கு மொழிகளில் 360 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் பூக்களம் என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார் இதுவே இவரது கடைசித் திரைப்படமானது.
திறமையான நடிகை: மலையாள சினிமா துறையில் மிகவும் திறமையான நடிகையான இவர், தனது 22வது வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அவரைவிட்டு பிரிந்து 16 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு 2021ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, தனது சகோதரி விஜயம்மா வீட்டில் இருந்தார். ஆரம்பத்தில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த, இவர் பிறகு பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
நேற்றிரவு உயிரிழந்தார்: இதையடுத்து, இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கனகலதா, நேற்றிரவு திருவனந்தபுரத்தில் உள்ள அவரின் வீட்டிலேயே உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மூத்த பழம் பெரும் நடிகையான கனகலதாவின் மறைவுக்கு பலரும் இணையத்தின் வழியாக தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











