குழந்தையை தத்து எடுத்தோம்.. கணவர் அதற்காகத்தான் அதை செய்தார்.. விருமாண்டி அபிராமி ஓபன் டாக்
சென்னை: நடிகை அபிராமி விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் ஃபேமஸ் ஆனவர். அவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் ஓரளவு நெகட்டிவ் ரோலை ஏற்றிருந்தார். அடுத்ததாக தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது கணவர் மற்றும் வாழ்க்கை முறை குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
வானவில் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் அபிராமி. தொடர்ந்து சார்லி சாப்ளின், மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் விருமாண்டி படத்தில் நடித்து புகழடைந்தார். அந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்த அவர் அதற்கு பிறகு திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனார். திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகியிருந்த அவர்; இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்தார். அடுத்ததாக தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அபிராமி பேட்டி: இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி இப்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எனது கணவர் பெயர் ராகுல். அவர்தான் எனக்கு நல்ல நண்பர். பள்ளியில் படிக்கும்போதிருந்தே அவரை எனக்கு நன்றாகவே தெரியும். அவருக்கு சினிமா, புகழ் உள்ளிட்ட விஷயங்களில் எல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை. அவர் எப்போதும் வாழ்க்கையை எதார்த்தத்தோடு அணுகக்கூடியவர்.
கீழே வா: நான் அவ்வப்போது ஒரு ஹீரோயின் என்று கொஞ்சம் ஆகாயத்தில் மிதப்பேன். அப்போதெல்லாம் அவர் என்னிடம் வந்து, 'சற்று கீழே வா. உலகம் வேறுமாதிரியானது என்பதை நினைவுப்படுத்துவார். அது உண்மையில் எனக்கு தேவையும் பட்டது. வெவ்வேறு சிந்தனைகள் கொண்டவர்கள் கணவன் மனைவியாக இணையும்போது அது நன்றாக இருக்கும் என்பது எனது அனுபவம். அது எனது விஷயத்தில் நடக்கவும் செய்திருக்கிறது.
பாதுகாப்பானவர்: அவர் ரொம்பவே பாதுகாப்பான மனிதார். வெளியிடங்களுக்கு செல்லும்போது என் மீதுதான் அதிக கவனம் வரும். என்னிடம் மக்கள் நெருங்கி பேசுவார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அதையெல்லாம் அவர் எந்த விதத்திலும் அசௌகரியமாக உணர்ந்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்தான் என்னுடைய முதல் ரசிகன். அந்த அளவுக்கு அவர் என்னை ரசிப்பார்.
குழந்தையை தத்து எடுத்தோம்: வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். பிறகு இங்கு வந்தார். அவர் எனக்காக மட்டும் இந்தியா வரவில்லை. முழு குடும்பத்திற்காகவும்தான் இங்கே வந்து செட்டில் ஆகிவிட்டார். முதல்கட்டமாக நாங்கள் இங்கு வந்ததற்கு காரணமே ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்காகத்தான். ஏனெனில் அதை வெளிநாட்டில் செய்ய முடியாது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் வெளிநாட்டில் செட்டிலாகியிருந்தோம். இப்போது எனக்கு இங்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. முதலில் அவருக்காக நான் அங்கே இருந்தேன். இப்போது எனக்காக அவர் இங்கே இருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











