நடிகை 'குத்து' ரம்யா 2 மாதமாக மாயம்! எங்கிருக்கிறார் என தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சி
பெங்களூர்: குத்து ரம்யா திடீரென மாயமாகியுள்ளதால் கர்நாடக அரசியல் வட்டாரத்திலும், கன்னட சினிமா பக்கமும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
தமிழில் குத்து, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா, கன்னடத்தில் நம்பர்-1 நடிகையாக இருப்பவர்.
இந்நிலையில், மண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரம்யா, ஆறே மாதங்களில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டும் தோல்வியடைந்தார்.

பொது நிகழ்ச்சிகளில் ஆப்சென்ட்
இந்த தோல்வி ரம்யாவை வெகுவாக பாதித்துள்ளது. ஏனெனில் தேர்தலுக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வெகுவாக குறைத்து வந்த ரம்யா, 'ஆர்யன்' என்ற கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார். அந்த படமும் ரிலீஸ் ஆகிய நிலையில் புனித்குமாருக்கு ஜோடியாக 'தொட்டமனே ஹுடுகா' என்ற படத்தில் நடிக்க போவதாக டிவிட் செய்தார்.

கடைசியாக ஆக.2ல் கண்ணில்பட்டார்
ஆனால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பிறகு அந்த படத்தில் நடிக்க போவதில்லை என்றும் ரம்யா டிவிட் செய்திருந்தார். கடைசியாக ஆகஸ்ட் மாதம் 2ம்தேதிதான் ரம்யா டிவிட் செய்துள்ளார். டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அதன்பிறகு டிவிட் செய்யவும் இல்லை.

வீட்டிலும் இல்லை
அரசியல் கூட்டமோ, சினிமா கூட்டமோ எதிலும் அம்மணியை காணவில்லை. பெங்களூர் ரிச்மண்ட் சர்க்கிளிலுள்ள அவரது அப்பார்ட்மென்டிலோ அல்லது அவர் வழக்கமாக தங்கும் தாஜ்வெஸ்ட் என்ட் ஸ்டார் ஹோட்டலிலோ கூட ரம்யா இல்லை. இதனால் ரம்யா குறித்து மர்மம் நிலவுகிறது.

தனி உதவியாளர் கை விரிப்பு
இதுகுறித்து ரம்யாவின் தனி உதவியாளர் கருணா ரெட்டியிடம் கேட்டபோது, "ரம்யா மேடமிடம் பேசி பல நாட்கள் ஆகிவிட்டன. அவர் இந்தியாவில் உள்ளாரோ, ஃபாரினில் உள்ளாரோ என்பது கூட எனக்கு தெரியாது" என்றார். நீங்கள் ரம்யாவிடம்தானே வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு "நான் வேலை பார்ப்பது உண்மைதான். ஆனால் மேடமிடம் பேசவில்லை" என்றார்.

எங்கே அவர்?
ரம்யாவுக்கு நெருக்கமான வேறு சிலரிடம் கேட்டபோது, அவர் அநேகமாக லண்டன் சென்று ஓய்வு எடுத்துக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தேர்தல் தோல்விக்கு பிறகு மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்" என்று பொத்தாம் பொதுவாக கூறினர். ரம்யாவுக்கு இதுகுறித்து கேட்டு மூன்று நாட்களுக்கு முன்பே இ-மெயில் அனுப்பியும், அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே ரம்யா குறித்த மர்மம் நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications











