நடிகைகளில் கம்பீர குரல் யாருக்கு.. ஐஸ்க்ரீம் குரல் யாருக்கு?
சினிமாவில் சொந்தக்குரலில் பேசுவது சில நடிகைகள்தான். பெரும்பாலோனோர் டப்பிங் பேசி சமாளித்து விடுவார்கள். ஆனால் சொந்தக்குரலில் பேசுபவர்களுக்குத்தான் தேசிய விருது கிடைக்கிறது என்பதால் பெரும்பாலான நடிகைகள் சிரமப்பட்டாவது சொந்தக்குரலில் பேச ஆசைப்படுகின்றனர்.
சில நடிகைகள் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் குரல் பின்னணி பேசும் அளவிற்கு செட் ஆகாது எனவே வேறு யாரையாவது டப்பிங் பேச வைத்து படத்தை முடித்து விடுவார்கள்.
ஆனால் சில நடிகைகளுக்கு குரல் இனிமையாக இருக்கும், ஆனால் தமிழ் பேச தெரியாது என்பதால் அவர்களை பேச வைப்பதில்லை. எப்படியாவது சொந்தக்குரலில் பேசி நடிக்க வேண்டும் என்று சில நடிகைகள் ஆசைப்படுவார்கள் அவர்களின் ஆசையை தெரிந்து கொண்ட இயக்குநர்களும் கதாநாயகிகளை சொந்தக்குரலில் பேச வைக்கின்றனர். அதுவே அவர்களுக்கு தனி அடையாளமாகிவிடும்.

சினேகாவின் குரலில்
அழகோடு எந்த கதாபாத்திரம் என்றாலும் சரியான பொருந்து சினேகாவிற்கு குரலும் சூப்பர்தான். நன்றாக தமிழ் பேசும் சினோகாவிற்கு உச்சரிப்பும் அழகாக வரும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

கம்பீரமான தன்ஷிகா
இன்றைய கதாநாயகிகளில் கம்பீரமான தோற்றம், அதற்கேற்க கண்கள் என அசத்துகிறார் தன்ஷிகா. பேராண்மை, அரவான், பரதேசி என மூன்று படங்களிலுமே அசத்தலான கதாபாத்திரத்தில் நடித்த தன்ஷிகாவிற்கு கம்பீரமான குரல் என்கின்றனர் ரசிகர்கள்.

ஐஸ்கிரீம் ஆண்ட்ரியா
அழகு மட்டுமல்ல குரலும் இனிமை என்பதனால்தான் பின்னணி பாடுகிறார் ஆண்ட்ரியா. சொந்தக்குரலில் பேசுவதோடு பிரபல இளம் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் பேசுகிறார். ஐஸ்கிரீம் போல உருகவைக்கும் குரல் ஆண்ட்ரியாவிற்கு என்கின்றனர் ரசிக கண்மணிகள்.

த்ரிஷாவின் சந்தோசம்
தமிழ் நடிகையாக இருந்தாலும் 15 வருடங்களுக்கு மேலாக சொந்தக்குரலில் பேசி நடித்ததில்லை த்ரிஷா. முதன் முறையாக மன்மதன் அம்பு படத்தில் கவர்ச்சியான குரலில் பேசி அசத்திய த்ரிஷா இப்போது சமர் படத்தில் சொந்தக்குரலில் பேசியது அவரது ரசிகர்களுக்கு உற்சாகமாக இருந்ததாம்.

மென்மையான சமந்தா
அழகான தோற்றம் மட்டுமல்ல குரலும் மென்மையாக ஒலிக்கிறது சமந்தாவிற்கு நீதானே என் பொன் வசந்தம் படத்தில் மென்மையாக பேசி ரசிகர்களை அசத்தினார் சமந்தா.

ஸ்ருதிஹாசனின் குரல் எப்படி?
ஸ்ருதிஹாசன் குரலில் பாடுவதை கேட்க இனிமையாக இருக்கும். ஆனால் பேசும் போது அதில் ஒரு காந்தம் இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.

இரண்டாம் உலகத்தில் அனுஷ்கா
அனுஷ்கா தெலுங்கு படங்களில் சொந்தக்குரலில் பேசி நடித்துள்ளார். முதன் முறையாக இரண்டாம் உலகம் படத்தில் சொந்தக்குரலில் பேச வைத்துள்ளாராம் செல்வராகவன். குரல் எப்படி என்று படம் வந்தால்தான் தெரியும்.

கம்பீரமும் கவர்ச்சியும் கலந்த குரல்
ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் பேசும் வரை நிறைய பேருக்குத் அவருடைய குரலைப் பற்றி தெரியாது. கம்பீரமும், ஒருவித கவர்ச்சியும் கலந்த குரல் என்பது அந்த படம் வெளியான பின்னர்தான் அறிந்து கொள்ள முடிந்தது. அதன்பின்னர் அவரது குரலே தனி அடையாளமாகிப் போனது.

சங்கீதாவின் அசத்தல்
கதாநாயகியாக நடித்த சங்கீதா பிதாமகன் படத்திற்கு பின்னர் அடுத்த ரவுண்டு வந்தார். அதற்கு காரணம் அவரது நடிப்பு மட்டுமல்ல அவரின் குரலும்தான் என்கின்றனர்.

தனித்தன்மையான ராதிகா
ராதிகாவின் கம்பீரத்தைப் போல அவரின் குரலுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். பேசிக்கொண்டே சிரிக்கும் அந்த அசத்தல் சிரிப்புக்கு இன்று வரை வேறு யாரும் வரவில்லை.

சரிதாவின் உருகும் குரல்
நடிகை சரிதா நடிப்புத்துறையில் இல்லை என்றாலும் அவரின் குரல் சமீபத்திய கதாநாயகிகள் வரை செட் ஆனது. அந்த அளவிற்கு இளமையான, இனிமையான உருகவைக்கும் குரல் சரிதாவிற்கு.

குஷ்பு, ரோஜா, சிம்ரன்
சினிமாவில் நடிக்கும் போது சொந்தக்குரலில் பேசாதா நடிகைகள் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளரான பின்னர் சொந்தக்குரலில் பேசி அசத்துகின்றனர். முதலில் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் குஷ்பு. அவருக்குப்பின்னர் ரோஜா, சிம்ரன் ஆகியோர் இப்போது சொந்தக்குரலில் பேசி நிகழ்ச்சித் தொகுப்பாளராக அசத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications











