Sayeesha Arya: மனைவி "ஐட்டம் சாங்" ஆடுவதை பாராட்டும் கணவன்.. பெண் அடிமைத்தனம் இல்லையா ஆர்யா?
சென்னை: அரைகுறை ஆடைகளுடன் அங்கம் காண்பித்தபடி ஆடுகிறார் மனைவி.. அதை செல்போனிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கும் கணவர், "நான் இதை பெரிய திரையில் பார்க்க வேண்டும், என்று காத்திருக்கிறேன்" என்று கருத்து சொல்கிறார்.
ஆம்.. நாம் நடிகை சாயிஷா ( Sayyesha Saigal) மற்றும் அவர் கணவர் ஆர்யா (Arya) பற்றிதான் பேசுகிறோம். சிம்பு, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்த, "பத்து தல" (Pathu thala) திரைப்படத்தில் இடம்பெற்ற Raawadi என்ற பாடலுக்கு ஆயிஷா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். அதற்கு "ஐட்டம் சாங்" (item song) என்று பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

நடிகை சாயிஷாவின் அங்கங்கள் மீது கேமரா கண்கள் குறிவைத்து அப்பட்டமாக உடலை காட்டுவதை போல அந்த நடன காட்சி அமைந்துள்ளது. இந்த பாடல் காட்சி யூடியூப் தளத்தில் வெளிவந்த பிறகுதான் அவரது கணவர் ஆர்யா இது போன்ற ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அந்த கருத்துக்கு கீழே இன்னொரு பின்னூட்டம் இட்ட ரசிகர் ஒருவர், ஆமாம் நாங்களும் உங்கள் மனைவியை பெரிய திரையில் பார்க்க காத்திருக்கிறோம் என்று ஆபாசமாக தெரிவித்தார்.
இந்த பின்னூட்டம் அதிர்ச்சியாக இருந்தாலும், ஆர்யா சொன்ன கமெண்ட் அதைவிட அதிர்ச்சி என்பதை மறுப்பதற்கு இல்லை. அங்கங்கள் தெரிய ஆடையை உடுத்திக் கொள்வதும், பெண்களின் அடிப்படை உரிமை என்ற காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். ஏனெனில் அது அவர்கள் சவுகரியம் என்ற தெளிவு ஆண்களுக்கு தேவை. ஆனால் ஆண்களுக்கு காட்டியே ஆக வேண்டும் என்ற அடிப்படையில், கவர்ச்சி பண்டமாக ஐட்டம் சாங் என்ற பெயரில் திரைப்படத்தில் பெண்களை ஆட விட்டு காட்டப்படும் நடனம் எப்படி சுதந்திரத்தின் கீழ் வரும்.. இது ஆணாதிக்க மனப்பான்மையின் அப்பட்டமான வெளிப்பான்மை அல்லவா?

ஆண்களின் உலகத்தில் ஆண்களுக்காக ஆட வைக்கப்படும் ஒரு பெண்ணின் கணவர், அதை நான் பெரிய திரையில் பார்க்க காத்திருக்கிறேன் என்று சொல்வது சிலர் சொல்வதைப் போல பெருந்தன்மை அல்லது மேல் தட்டு எண்ணம் கிடையாது. அப்பட்டமான ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் பெண்ணியல் ஆர்வலர்கள் சிலர். திரைப்படங்களில் குத்து பாடல் என பெண்களை அரைகுறை ஆடையுடன் ஆட விடுவது ஏன் என்று இதுவரை எந்த ஒரு பெண்ணியவாதியும் பெரிதாக குரல் எழுப்பாததுதான் இந்த கொடுமைகளுக்கு காரணம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் அரைகுறை ஆடைகளில் ஆடாத போது பெண்களுக்கு மட்டுமே இந்த பாரபட்சம் என்பதை சற்று உற்றுப் பார்த்தால் ஆர்யாவின் கருத்து அபத்தமானதாக தோன்றுமே தவிர பரந்த மனதுடன் வெளிப்பட்ட வார்த்தையாக தோன்றப் போவது கிடையாது. இன்னும் எத்தனை காலத்துக்கு தான் நடிகைகளை ஆபாசமாக ஆடவிட்டு ஆண்களின் காம பார்வைக்கு பண்டமாக விருந்தளித்துவிட்டு அதை ஏதோ பெண் சுதந்திரம் என்பது போல பூசி மெழுகி, மூளைச் சலவை செய்யப் போகிறோம் என்பதை படைப்பாளிகள் யோசிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











