நடிகைகள் உங்கள் சொத்து இல்லை.. நயன்தாராவுக்கு சப்போர்ட் செய்து சி.வி.சண்முகத்தை கிழித்தெடுத்த குஷ்பூ
சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், எனக்கு நயன்தாரா வேண்டும் அதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி தருவாரா என கொச்சையாக பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் வலுக்க ஆரம்பித்ததையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ; சி.வி.சண்முகத்தை கண்டித்து பெரிய ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார். அது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
சினிமா நடிகைகளை அரசியலில் இருப்பவர்கள் கொச்சையாக பேசுவதும், பார்ப்பதும் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு நடிகை திரிஷா கூவத்தூர் ரெசார்ட்டுக்கு வந்து சென்றதாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் பேசியிருந்தார். அதற்கு கண்டனங்கள் வலுத்தன. நிலைமை இப்படி இருக்க இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நயன்தாரா குறித்து கொச்சையாக பேசினார்.

என்ன பேசினார்?: அவர் பேசுகையில், 'அப்துல் கலாம் கனவு காண சொன்னார். முதலமைச்சரோ ஒருபடி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும். அதை முதலமைச்சர் நிறைவேற்றுவாரா?.. இதோ இவர் (அருகில் இருந்தவரை பார்த்து) நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சொல்வார். அதையும் செய்துவைப்பாரா?' என கொச்சையாக பேசியிருந்தார். அவரது பேச்சு பலத்த எதிர்வினைகளை சந்தித்தது. அதனையடுத்து அவர் வருத்தமும் தெரிவித்தார்.
குஷ்பூ கண்டனம்: பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தார்கள். அந்தவகையில் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில், "பெண்கள் - குறிப்பாக பெண் நடிகர்கள் - உங்கள் சொத்து அல்ல, உங்கள் பேச்சுப் பொருள் அல்ல, அல்லது ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதெல்லாம் உரையாடல்களில் இழுத்து வரக்கூடிய ஒரு பண்டம் அல்ல. ஒரு பெண் நடிகரின் பெயர், மலிவான நகைச்சுவைகளுக்கோ, அற்பமான அவமானங்களுக்கோ, அல்லது ஒருவரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்கோ ஒரு கருவி அல்ல. மற்றவர்களைக் கேலி செய்வதற்கோ அல்லது ஒரு கருத்தை நிரூபிப்பதற்கோ ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்துவது, பேசுபவரின் மனநிலையையும் வளர்ப்பையும் மட்டுமே அம்பலப்படுத்துகிறது.
போதும், இதுவே போதும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணுக்குப் பிறந்தவர்தான். ஒரு பெண் நடிகரைப் பற்றி நீங்கள் சாதாரணமாகக் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பு, உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் - அந்த உதாரணம் உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் அல்லது உங்கள் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தால், நீங்கள் இதேபோல் பேசுவீர்களா? மக்கள் இதுபோன்ற இழிவான கருத்துக்களைக் கூறும்போது, அவர்கள் குறிப்பிடும் பெண்ணை சங்கடப்படுத்துவதில்லை - மாறாக, அவர்கள் தங்களின் சொந்த மனநிலையையும், மோசமான வளர்ப்பையும், அடிப்படை மனிதப் பண்பின்மையையும் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். இது மரியாதைக் குறைவானது மட்டுமல்ல. இது மனிதகுலத்திற்கே ஒரு அவமானம். மேலும் நினைவில் கொள்ளுங்கள், மரியாதை என்பது ஒருபோதும் ஒருவழிப் பாதை அல்ல" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications















