கேரளாவில் 100% கல்வியறிவு இருந்து என்ன புண்ணியம்?... குஷ்பு கேள்வி!

கொச்சிக்கு வந்திருந்த குஷ்பு, அங்கு நிர்வாகவியல் மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கோருவதற்கு முன்பு, தங்களைத் தாங்களே முதலில் சக்தி பெற்றவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
கேரளா இன்று 100 சதவீத கல்வியறிவுடன் உள்ளது. ஆனால், எத்தனை பெண்களுக்கு இங்கு வேலை உள்ளது, எத்தனை பேர் வேலை பார்க்கும் திறனுடன் உள்ளனர். பெரும்பாலானோர் இல்லை என்பதே ஆச்சரியமான பதிலாக உள்ளது.
முதலில் நத்தைகள் போல கூட்டுக்குள் இருக்கும் நிலையிலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும். தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டும். நாம் மிகப் பெரிய சக்தி என்பதை முதலில் நாம் உணர வேண்டும். பிறகுதான் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதன் பிறகு நாம் நாடாளுமன்றம், சட்டசபைகளில் போதிய பிரதிநிதித்துவம் கேட்டுப் போராடலாம்.
ரிலையன்ஸ், யுடிவி போன்ற பெரிய நிறுவனங்கள் திரைப்படம் தயாரிக்க வருவது தவறான ஒன்றல்ல. அதேசமயம், திரைப்பட உருவாக்கம் என்பது பணம் பண்ணும் தொழில் அல்லது. லட்சிய வேட்கை இருந்தால் மட்டுமே திரைப்படத் தயாரிப்பில் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.
நான் ஒரு பிரபலமாக இருப்பதால் எதிலும் ஈசியாக நுழைந்து விட முடிகிறது. அரசி்யலில் நுழைவது ஒரு நடிகையாக எனக்கு எளிதாகத்தான் இருந்தது. ஆனால் அத்தோடு நின்று விடக் கூடாது. கடுமையாக உழைக்க வேண்டும். ப்போதுதான் நமது பயணம் மேலும் முன்னேறிச் செல்லும் என்றார் குஷ்பு.


Click it and Unblock the Notifications











