நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார்.. அவங்க அதை செஞ்சதே பெரிய விஷயம்.. யோகிபாபு ஓபன் டாக்
சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக டெஸ்ட் திரைப்படம் வெளியானது.நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தப் படம் படுதோல்வியைத்தான் சந்தித்தது. அடுத்ததாக அவரின் நடிப்பில் மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்சிக் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்தப் படங்கள் தவிர்த்து மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் அவர் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நயன் குறித்து யோகிபாபு பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பு பயணத்துக்கு விக்னேஷ் சிவன் தனது முழு ஆதரவை கொடுத்துவருகிறார். இரண்டு பேருக்கும் நானும் ரௌடிதான் பட சமயத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி; சில வருடங்களுக்கு முன்பு திருமணத்தில் முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரண்டு மகன்களை பெற்றார்கள். வாடகை தாய் விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டதாக பேச்சுக்கள் எழுந்த சூழலில்; அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று விசாரணையில் உறுதியானது.
ஹிந்தியில் அறிமுகம்: இத்தனை வருடங்களாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டும் நடித்துவந்த அவர்; திருமணம் முடிந்தவுடன் ஹிந்தியில் அறிமுகமானார். ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியிருந்த ஜவான் படத்தில்தான் அவர் முதன்முறையாக ஹிந்தியில் நடித்தது குறிப்பிடத்தக்கது. நயன் நடித்த முதல் ஹிந்தி படமே மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நயனுக்கு மேற்கொண்டு வாய்ப்புகள் வரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
தொடர் தோல்விகள்: கடந்த சில வருடங்களில் நயன் நடித்த படங்களில் ஜவான் மட்டுமே ஹிட்டாகியிருக்கிறது. அன்னபூரணி உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. கடைசியாக வெளியான டெஸ்ட் திரைப்படம்கூட தோல்விதான். மேலும் படத்தை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு அப்படத்தால் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்வரை நஷ்டம் என்றே கூறப்படுகிறது. எனவே கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நயன்.

அடுத்த படங்கள்: நயனின் கைவசம் இப்போதும் ஏராளமான படங்கள் இருக்கின்றன. அதன்படி மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்சிக் ஆகிய படங்களில் நடித்துவரும் அவர்; சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதேசமயம் அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் இரண்டு பேருக்குமிடையே மோதல் ஏற்பட்டதாகவும்; அநேகமாக படத்திலிருந்து இரண்டு பேரில் ஒருவர் விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் தயாரிப்பு தரப்பு உள்ளே நுழைந்து சமரசம் செய்ததாகவும்; அதனால் பிரச்னை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
யாரும் செய்யாதது: இதற்கிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலாவில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாமென அவர் இப்போது சொல்லியிருந்தாலும் அந்தப் படத்தின்போது அப்பட்டம்தான் அவருக்கு இருந்தது. அப்படிப்பட்ட ரேஞ்சில் இருந்த நயன்; காமெடி ஆக்டருக்கு ஜோடியாக நடித்ததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள்.
யோகிபாபு பேச்சு: இந்நிலையில் நயன்தாரா குறித்து யோகிபாபு பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார். அவங்க ஒரு காமெடி ஆக்டருடன் நடிப்பதே பெரிய விஷயம். அதில் காதல் வசனம் எல்லாம் பேச வேண்டும். அதிலேயே அவங்க ஜெயிச்சிட்டாங்க. அந்தப் படத்தில் அவர் காலை எனது முகத்தில் வைக்க வேண்டும். அதற்கு அவங்க ஒத்துக்கொள்ளவே இல்லை. பிறகு நானும், நெல்சன் திலீப்குமாரும் சொல்லி அந்தக் காட்சிக்கு ஒத்துகொண்டார். அப்படி இருந்தும் அவர் என் முகத்தின் மீது கால் வைக்கவே இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











