கௌரி கிஷனிடம் மட்டுமில்லை.. பிரியா ஆனந்த்திடமும் சேட்டையை காண்பித்த யூடியூபர்.. இதே வேலையா?
சென்னை: அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகை கௌரி கிஷனிடம் யூடியூபர் ஒருவர் உடல் எடை குறித்து கேட்டது பெரிய விவாதத்தை கிளப்பியது. இந்த விஷயத்தை தேசிய ஊடகங்கள் முதற்கொண்டு கவனித்தன என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு அந்த யூடியூபர் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் அவர் கௌரி கிஷனிடம் மட்டுமின்றி நடிகை பிரியா ஆனந்த்திடமும் தனது சேட்டையை காண்பித்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.
96 பட நடிகை கௌரி கிஷன் வரிசையாக படங்கள் நடித்துவருகிறார். அந்தவகையில் சமீபத்தில் அதர்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள்போது பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தார்கள். அப்போது அவரது உடல் எடை குறித்து யூடியூபர் கேட்டது கௌரிக்கு அதீத கோபத்தை உண்டு செய்தது. உடனடியாக அந்த இடத்திலேயே அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்தார்.
பற்றிக்கொண்ட பஞ்சாயத்து: அவர் பதிலடி கொடுத்தாலும் யூடியூபர் தான் செய்த தவறை உணர்வதாக இல்லை. மீண்டும் மீண்டும் தான் கேட்டதை நியாயப்படுத்திக்கொண்டே இருந்தார். இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து திரைத்துறையில் பலரும் கௌரிக்கு ஆதரவாக நின்றார்கள். அதுமட்டுமின்றி அந்த இடத்தில் அருகில் இருந்த ஹீரோவும், இயக்குநரும் அமைதியாக இருந்தது தவறு என்றும் சுட்டிக்காட்டினார்கள்.

வருத்தம் தெரிவித்த யூடியூபர்: நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அந்த யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், 'நான் எந்த உள்நோக்கத்தோடும் அந்தக் கேள்வியை கேட்கவில்லை. ஜோக்காகத்தான் கேட்டேன்' என்று மீண்டும் மீண்டும் தான் தவறு செய்யாத தொனியிலேயே பேசியிருந்தார். இருந்தாலும் வருத்தம் தெரிவித்ததன் காரணமாக அந்தப் பிரச்னையின் வீரியம் கொஞ்சம் குறைந்தது.
கௌரி கிஷன் பதிவு: அவர் அவ்வாறு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டதையும் பெரும்பாலானோர் கண்டித்தனர். நடிகை கௌரி கிஷனும் தனது எக்ஸ் பக்கத்தில், "அது ஒரு வேடிக்கையான கேள்வி. தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறியிருக்கிறார். இப்படி பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது மன்னிப்பே இல்லை. வருத்தத்தையோ அல்லது வெற்று வார்த்தைகளையோ நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்" என்று தடாலடியாக குறிப்பிட்டிருந்தார்.
பிரியா ஆனந்த்திடமும்: இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கௌரி கிஷன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நடிகைகளிடம் அப்படி கேட்பது நீண்ட காலமாக நடந்துகொண்டிருக்கிறது. அந்த யூடியூபர் பற்றி எனக்கு தெரியும். அவருக்கும் எனக்குமே நிறைய பிரச்னைகள் வந்திருக்கின்றன. முதலில் அந்த மாதிரி கமெண்ட்ஸ் செய்ய முடியாது.
இவ்வளவு நாள் விட்டிருக்கக்கூடாது: இந்த மாதிரி ஆட்களை இத்தனை நாட்கள் இப்படி பேசவே விட்டிருக்கக்கூடாது. பார்க்கும் வேலைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அந்த வேலையை வைத்துதானே குடும்பத்தை காப்பாற்றுகிறோம்" என்றார். ஆக கௌரி கிஷன் போலவே பிரியா ஆனந்த்திடமும் அந்த யூடியூபர் ஏடாகூடாமான கேள்விகளை கேட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











