இவரும் நடிகைதான், ஆனால்...!

செய்யும் செயலில் நேர்மையும் கொஞ்சமாவது பொதுநலமும் இருந்தால், ஒழுக்க விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக கலைஞர்களையும் மக்கள் பார்ப்பார்கள் என்ற உண்மையை உணர்த்தும் செய்தி.
சிரியாவில் உள்ள ஈராக்கிய அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் சமீபத்தில் பார்வையிட்டனர் ஹாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஏஞ்சலினா ஜூலி - பிராட் பிட்.
சிரிய தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் வசிக்கும் இந்த அகதிகளுக்கு உதவிகள் சரியான முறையில் கிடைக்கின்றனவா… அவர்களின் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்பதை அவர்களுடனே தங்கியிருந்து இந்த நட்சத்திரங்கள் கேட்டறிந்தனர்.
தேவையான அவசிய உதவிகள் கிடைக்க ஆவண செய்வதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.
ஈராக் போருக்குப் பின் சிரியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்கள் இந்த மக்கள். இவர்களுக்கு சிரிய அரசும் மக்களும் தேவையான உதவிகளை இத்தனை ஆண்டுகளாகச் செய்து வருகிறார்களாம். இந்த மக்களின் வாழ்க்கை நிலையில் முன்னேற்றம் ஏற்பட கூடுதல் வசதிகள் செய்து தரவேண்டும் என்று சிரிய அதிபரிடம் ஜூலி தம்பதிகள் நேரில் வேண்டுகோள் விடுத்தனர்.
உலகம் முழுக்க உள்ள அகதிகள் முகாம்களை பார்வையிட்டு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய விரும்பும் ஜூலி தம்பதிகள் ஏற்கெனவே, கென்யா, ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்கு அகதிகளாக வாழும் மக்களுக்கு உதவிகள் செய்துள்ளனர்.
ஐநா சபையின் சிறப்பு நல்லெண்ணத் தூதராகவும் ஜூலி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
யார் யார் பெயர் லிஸ்டில் இருக்கிறது... போலீசாருக்கு என்னென்ன பொய்த் தகவல்கள் கொடுக்கலாம் என ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருக்கும் நட்சத்திர நாட்டாமைகள், என்றைக்காவது இங்கிருக்கும் இலங்கைத் தமிழர் அகதி முகாம்களை எட்டிப் பார்த்திருப்பார்களா?.


Click it and Unblock the Notifications











