2012: ரூ.1200 கோடியில் ஒரு பிரம்மாண்ட கற்பனை

ஹாலிவுட்டில் அப்படி ஒருவர் கற்பனை செய்ததால் உருவாகியுள்ள படம்தான் 2012.
சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம்.
வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆனால் 2012க்குப் பிறகு?
அது பற்றி எந்தக் குறிப்புகளும் மாயன் நாகரீக ஆதாரங்களில் இல்லையாம்.
ஆக 2012-ஐ பூமியின் எக்ஸ்பயரி டேட் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று இயக்குநர் யோசித்ததன் விளைவுதான் இந்த 2012 திரைப்படம்.
ரூ 1200 கோடி செலவில்...
உலகம் முழுவதும் ஒரேநாளில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டால் என்ன நிகழும்? என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெரிய பெரிய நகரங்கள் அத்தனையும் இடிந்து தரைமட்டம் ஆவது போலவும், உலகிலேயே உயரமான இமயமலையையே சுனாமி விழுங்குவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த திகிலுக்கு மத்தியில், ஒரு குடும்பம் விமானத்தில் தப்பி செல்கிறது. உலகம் அழிந்தபின், அவர்கள் நிலை என்ன? என்பதாகப் போகிறது கதை.
'இன்டிபென்டன்ஸ் டே,' 'டே ஆஃப்டர் டுமாரோ' ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ரோலன்ட் எம்மெரிச், இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.
அமந்தா பீட், டேனி குளோவர், தன்டி நியுடோன், ஆலிவர் ப்லாட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 13-ந் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரைக்கு வருகிறது.
பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ்!:
இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகளை நேற்று புதன்கிழமை சத்யம் சினிமாஸில் திரையிட்டுக் காட்டினர்.
உலக சினிமா சரித்திரம் பார்த்திராத கிராபிக்ஸ் அற்புதம் எனும் வகையில் உலகம் அழியும் காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள். முன்னோட்டக் காட்சிகள் முடிந்த பின்னும் படம் குறித்த பிரமிப்பு நீங்காமலேயே பலரும் அரங்கை வி்ட்டு வெளியேறினர்.


Click it and Unblock the Notifications











