ஹாரி பாட்டரை உருவாக்கியது யார்?

உலகெங்கும் உள்ள சிறார்கள் மட்டுமல்லாது வாலிப, வயோதிகர்களையும் கவர்ந்த கற்பனைக் கதாபாத்திரம் ஹாரி பாட்டர். இப்போது பாட்டர் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
முதன் முதலில் ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தை உருவாக்கியது யார் என்பதுதான் அந்த சிக்கல். இதுதொடர்பாக பாட்டர் வரிசைப் படங்களைத் தயாரித்து வரும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும், இயக்குநர் ஜான் பச்லர் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நான்தான் முதன் முதலில் ஹாரி பாட்டர் கேரக்டரை உருவாக்கியவன் என்கிறார் பச்லர். இவர் 1986ம் ஆண்டு இயக்கிய ட்ரோல் என்ற படத்தில் ஹாரி பாட்டர் ஜூனியர் என்கிற கேரக்டர் இடம் பெற்றுள்ளதாம். இந்தப் படம் வந்த பிறகுதான் பெண் எழுத்தாளர் ரெளலிங்கின் ஹாரிபாட்டர் கதைகள் வெளி வரத் தொடங்கியது என்கிறார் பச்லர்.
ட்ரோல் படத்தை 20 மில்லியன் பவுன்ட் செலவில் ரீமேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் பச்லர். ஆனால் இதற்கு வார்னர் பிரதர்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் வக்கீல்கள் கூறுகையில், ஜே.கே. ரெளலிங்கின் ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தை வைத்து படம் எடுக்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது. பச்லர் தனது ட்ரோல் படத்தை ரீமேக் செய்தால் அதில், ஹாரி பாட்டர் கதாபாத்திரம் இடம் பெற்றால் சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்துள்ளனர்.
ஆனால் பச்லர் தரப்போ இதை ஏற்க மறுக்கிறது. பச்லரின் பங்குதாரரும், தயாரிப்பாளருமான பீட்டர் டேவி கூறுகையில், ட்ரோல் கதைக்கும், ரெளலிங்கின் நூல்களில் உள்ள கதைகளுக்கும் பல பொருத்தங்கள் உள்ளன. ட்ரோல்தான் முதன் முதலில் வந்தது. எனவே ரெளலிங்கின் கதைகளைப் படித்து விட்டு பச்லர் அதிர்ச்சி அடைந்தார் என்கிறார்.
ஆனால் ரெளலிங்கோ இதை மறுக்கிறார். நான் ட்ரோல் கதையைப் படித்ததே கிடையாது. எனது ஹாரிபாட்டர் கதாபாத்திரம் ஒரிஜினல் ஆனது என்கிறார்.
ஹாரி பாட்டரை உருவாக்கியது யார் என்ற சர்ச்சை வெடித்துக் கிளம்பியுள்ளதால் ஹாலிவுட்டிலும், இங்கிலாந்திலும் இது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











