நேரு-எட்வினா காதல் பற்றிய படம்: கைவிட வைத்த காங்கிரஸ்!

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலேய அரசு சார்பில், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர், மவுண்ட் பேட்டன் பிரபு. அவருடைய மனைவி எட்வினாவுக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் மிக நெருங்கிய காதல் தொடர்பு இருந்து வந்ததை பலரும் பதிவு செய்துள்ளனர், புத்தகங்களாகவும் கட்டுரைகளாகவும்.
மவுண்ட்பேட்டன் மகள் பமீலாவும் இதுகுறித்து தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காதலை மையப்படுத்தி இன்டியன் சம்மர் எனும் பெயரில் படமெடுக்க விரும்பியது ஹாலிவுட் நிறுவனமான யுனிவர்சல் பிக்சர்ஸ். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு இந்தியாவில் நடக்கவிருந்தது.
ஆனால் இந்தப் படம் எடுப்பதற்கு இந்திய அரசு சார்பில் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டனவாம்.
பொதுவாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவைப் பற்றியோ, இந்தியாவிலோ படமெடுத்தால் அந்தக் கதை, காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் போன்றவை எந்த விதத்திலும் இந்திய நாட்டின் மதிப்பையோ, இந்திய மக்களின் இமேஜையோ பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. எனவே படத்தின் கதை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் இந்திய அரசுக்கு அவர்கள் தெரிவித்தாக வேண்டும்.
இன்டியன் சம்மர் படம் குறித்த அனைத்து விவரங்களும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தக் கதையைப் படமாக்கும்போது நிச்சயம் செக்ஸ் காட்சிகள் இருக்கக் கூடாது என்றும், நேருவின் மரியாதையைச் சிதைக்கும் வகையிலான நேரு - எட்வினா காதல் காட்சிகள் முடிந்தவரை இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் இந்திய அரசு கிட்டத்தட்ட உத்தரவு பிறப்பித்துள்ளது.
காரணம் இன்றைக்கு இந்தியாவை ஆளும் காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி, நேருவின் பேரன் ராஜீவ் காந்தியின் மனைவி. மற்றொரு தலைவர் ராகுல் காந்தி, நேருவின் கொள்ளுப் பேரன். இன்னொரு தலைவர் ப்ரியங்கா கொள்ளுப் பேத்தி.
மவுண்ட்பேட்டன் பிரபுவோ (1979ல் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார் இவர்) பிரிட்டிஷ் மகாராணி குடும்பத்தின் நெருங்கிய உறவினர். இவர்கள் இந்தப்படம் வராமலிருந்தாலே நல்லது எனக் கருதுவதாக தெரிய வந்துள்ளது.
இன்னொரு பக்கம், படத்தின் தயாரிப்பாளர்களான யுனிவர்சல்காரர்கள், "எடுப்பது காதல் பற்றிய படம். அதில் காதல், நெருக்கமான காட்சிகள் இல்லாமல் எப்படி எடுக்க முடியும். அதிகபட்ச காதல் காட்சிகளுடன் உணர்ச்சிகரமான படமாக இதை எடுங்கள். அப்போதுதான் படத்துக்கு செலவழிக்கவிருக்கும் 40 மில்லியன் டாலர் பணம் தேறும்" என இயக்குநர் ஜோ ரைட்டுக்கு உத்தரவிட்டதாம்.
ஒருபக்கம் இந்திய நாட்டு அரசு, இன்னொரு பக்கம் ஜாம்பவான் நிறுவனமான யுனிவர்சல்... விழி பிதுங்கிப் போன ரைட், இந்தப் படத்தை இப்போதைக்கு எடுக்காமல் இருப்பதே 'ரைட்' என முடிவு செய்து விலக, படத்தையே ரத்து செய்துவிட்டது யுனிவர்சல்.
ஆனாலும், மார்க்கெட் நிலைமைகள் சரியானதும் இதைவிட குறைந்த செலவில், இந்தியாவுக்குள் வராமலேயே இந்தப் படத்தை எடுக்க முடியுமா என்றும் யோசித்து வருகிறதாம் பிரிட்டிஷ் பட நிறுவனம் ஒன்று.


Click it and Unblock the Notifications











