ஆஸ்கரில் புதிய விதிகள்.. நிம்மதியில் இந்திய இயக்குநர்கள்.. அப்படி என்னதான் மாத்தி இருக்காங்க?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுகள் என்பது, உலக அளவில் வழங்கப்படும் சினிமா விருதுகளில் மிகவும் முக்கியமான விருதாக பார்க்கப்படுகிறது. காரணம், இந்த விருதுக்கான போட்டி என்பது சர்வதேச அளவில் இருக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் தேர்வுக்குழுவினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கும் விருதாக இந்த விருது உள்ளது. இப்படியான நிலையில் ஆஸ்கார் விருதுகள் குழுவில் தற்போது புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மூலம் வழங்கப்படுகிற இந்த ஆஸ்கர் விருது வெல்வது என்பது மிகவும் சவாலான விஷயம் தான். காரணம், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு ஒரு படம் பரிந்துரைக்கப்படுவதற்கே பல கட்ட அரசியலை கடந்தாகவேண்டி உள்ளது. காரணம் இந்தியா போன்ற நாட்டில் பல மொழிகளிலும் படங்கள் வெளியாகிறது. பெரும்பாலான படங்கள் வணிக நோக்கத்திற்காக மட்டும் எடுக்கப்படுகிறது என்றாலும், இந்தியா முழுவதும் வெகு சில படங்களே இந்திய சூழலை பிரதிபலிக்கும் கதைகளைக் கொண்ட படங்களாக உள்ளன. உதாரணத்திற்கு கடந்த ஆண்டு சூரி நடித்து வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியான தமிழ் படமான கொட்டுக்காளி படத்தைக் கூறலாம்.

ஆஸ்கர் அரசியல்: இந்த படம் சர்வதேச அளவில் பல நாடுகளில் விருதுகளை வென்றாலும், ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்படும் படங்களின் பட்டியலில் இல்லை. இது தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், இந்த அரசியல் எதிர்பார்த்தது தானே என்ற மனநிலையில் திரையுலகினர் இருந்ததை பார்க்க முடிந்தது. இப்படி பல கட்ட அரசியலுக்குப் பின்னர் ஒரு படம் ஆஸ்காருக்கு அனுப்பட்டால், அங்கு நடப்பவை, படைப்பாளிகளுக்கு ஆஸ்கர் மீது வெறுப்பையும் அவமரியாதையும்தான் ஏற்படுத்துகிறது எனக் கூறலாம்.
குற்றச்சாட்டு: காரணம் ஒரு ஆண்டுக்கு ஆஸ்கருக்கு சுமார் 300 படங்களில் இருந்து 350 படங்கள் வரை விண்ணப்பிக்க படுகிறது. ஆனால், இந்த படங்கள் அனைத்தும் ஆஸ்கர் குழுவில் இருக்கும் வாக்காளர்களால் பார்க்கப்படுவது கிடையாது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. வாக்காளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரைப் மறைமுகமாக சந்தித்து, அவர்களிடம் தங்களது படங்களுக்கு வாக்களிக்க கோரிக்கைகள் எல்லாம் நடைபெறுகிறது. இது போன்ற நடவடிக்கைகளால், பல படங்கள் முதல் சுற்றுக்கே தகுதி பெறாமல் வெளியேறிவிடுவதாக கூறப்படுகிறது. இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற படங்கள் அனைத்தையும் வாக்காளர்கள் பார்ப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
விதிமுறைகள்: இப்படியான குற்றச்சாட்டுகளை எதிர்காலங்களில் தவிர்க்க, வாக்காளர்கள் அனைவரும் அனைத்து படங்களையும் பார்த்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், அவற்றை பிரத்யேகமான இணையதளத்தின் மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் படங்களுக்கு உரிய கவனம் செலுத்த ஆஸ்கார் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வகை படங்களில், ஒரு மனிதன் எந்த அளவிற்கு படைப்பாற்றல் மிக்க படைப்பாளியாக இருக்கிறார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என ஆஸ்கார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விதிமுறை மாற்றங்கள் பல படைப்பாளிகளுக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. மேலும் 98 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











