மூளையில் ரத்த கட்டு.. 8 மாத கர்ப்பம்.. தாங்கமுடியாத தலைவலியால் படுத்த படுக்கையாக இருந்த நடிகை!
சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகை தான் குழந்தையை சுமந்து கொண்டு இருந்த போது, எட்டாவது மாதத்தில் தனக்கு மூளையில் ரத்த கட்டு இருப்பது தெரிந்து பெரும் சிரமத்தை சந்தித்ததாக கூறியுள்ளார். மேலும், கடுமையான தலைவலியால் படுத்த படுக்கையாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதலை கூறிவருகின்றனர்.
வொண்டர் வுமனாக நடித்து ஹாலிவுட்டில் மிகவும் முக்கியமான நடிகை என்ற இடத்தை பிடித்தார் கால் கடோட். மேலும், ஸ்னோ ஒயிட், இன் தி ஹேண்ட் ஆஃப் டான்டே மற்றும் தி ரன்னர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான யாரோன் வர்சனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூளையில் ரத்த கட்டு: இந்நிலையில் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவமனையில் கைக்குழந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு எனக்கு சவாலான ஆண்டாக இருந்தது. என் தனிப்பட்ட கதையை எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லாமல் கனத்த இதயத்தோடு தான் இதை சொல்கிறேன். நான் இதை சொல்வதன் மூலம், பலருக்கு இது விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். மேலும், சிலர் இதுபோன்ற கடுமையான சூழ்நிலையை மன உறுதியுடன் எதிர்கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.
8 மாத கர்ப்பம்: கடந்த பிப்ரவரி மாதம் கர்ப்பத்தின் எட்டாவது மாதத்தில், என் மூளையில் ஒரு பெரிய ரத்த கட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடுமையான தலைவலியால் என்னால், எழுந்து நடக்கக்கூட முடியவில்லை. தினமும் வலியால் துடித்துக்கொண்டு இருந்தேன். கடைசியாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்த போது, ஒரு அதிர்ச்சியான தகவலை மருத்துவர் கூறினார். அதைக்கேட்டு, ஒரு நொடி நானும் எனது குடும்பத்தினரும் உடைந்து போய்விட்டோம்.
இதையடுத்து, மருத்துவமனை விரைந்து சென்று சில மணிநேரத்திலேயே, எனக்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது தான் என் மகள் ஓரி பிறந்தாள். ஓரி அதற்கு அர்த்தம் 'ஒளி' இந்த பெயரை நான் தற்செயலாக வைக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு முன், என் மகள் பிறந்தது என் இருண்ட வாழ்க்கைக்கு வெளிச்சமாக அவள் பிறந்ததால், அவளுக்கு அந்த பெயரை வைத்தேன். இன்று நான் முழுமையாக குணமடைந்து திரும்பி இருக்கிறேன்.
கடுமையான பயணம்: இந்த கடுமையான பயணம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. முதலில், நம் உடல் சொல்லும் வலி, அசௌகரியம் அல்லது நுட்பமான மாற்றங்களில் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளன என்பதை நாம் நம்ப வேண்டும். அது உங்களின் உயிரைக் காப்பாற்றும். இரண்டாவதாக, விழிப்புணர்வு முக்கியம். 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு 100 பேரில் 3 பேர் மூளையில் இரத்தக் கட்டியை உருவாக்கும் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. இது குணப்படுத்தக்கூடியது ஒன்றுதால், ஆனால், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது சுலபம் இல்லை என்றால் பெரும் சிக்கல் தான்.
இந்த தகவலை இங்கே பகிர்வதன் நோக்கம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுதானே தவிர, யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. இந்த பதிவினை படிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் உடல் மீது கவனம் செலுத்தி, தங்கள் உடல்நிலைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நடிகை அந்த பதிவில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











