என் மகனை நான் சரியாக வளர்க்கவில்லை, மன்னித்து விடுங்கள்.. ஜாக்கி சான் வேதனை!
பெய்ஜிங்: உலகப் புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசான் "என்னுடைய மகனுக்கு நான் நல்லவற்றை சொல்லித்தருவதற்கு தவறிவிட்டேன்" என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மகன் போதை மருந்து வழக்கில் கைதானதிற்காக ஜாக்கிசான் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.
இவருடைய மகனான ஜேசீ சான் போதை மருந்து வழக்கில் பெய்ஜிங்கில் கைது செய்யப்பட்டார்.

முழுப்பொறுப்பு ஏற்கிறேன்:
சீனாவின் வெய்போ இணைய வலைப்பக்கத்தில் ஜாக்கி மகனுடைய செயலுக்கு "முழுப்பொறுப்பு" ஏற்று பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

வளர்ப்பில் தவறு:
"ஒரு பிரபலமாக நான் வெட்கப்படுகின்றேன். 31 வயதான என் மகனை சரியாக வளர்க்கத் தவறிவிட்டேன்" என்று வேதனையுறும் ஜாக்கி 2009 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கின் போதை ஒழிப்பு தூதராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலியைத் தந்த மகன்:
"ஒரு தந்தையாக நான் வலியை அனுபவிக்கின்றேன். அவருடைய தாய் இதயமே வெடித்துவிடும் நிலையில் உள்ளார். இது இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

22 கோடி ரசிகர்கள்:
அவருடைய வெய்போ வலைப்பக்கத்தை 22 கோடி ரசிகர்கள் பின் தொடர்கின்றனர் என்பது முக்கியமானது.

போதைப் பொருள் வழக்கு:
ஜேசீ மற்றும் தைவான் நடிகரான கைகோ ஆகியோர் கடந்த 14 ஆம் தேதி அன்று தடைசெய்யப்பட்ட மாரிஜுனா என்னும் போதைப் பொருளை புகைத்தபோது பிடிபட்டனர்.

தோற்றுவிட்டேன் நான்:
"நான் ஒரு தந்தையாக தோற்றுவிட்டேன். எனது மகனுடன் இணைந்து சமூகத்திடம் நானும் மன்னிப்பு கேட்கின்றேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரியல் ஹீரோ ஜாக்கி:
தந்தையாக தோற்றுப்போயிருந்தாலும் இம்மன்னிப்பின் மூலமாக ஒரு நடிகனாகவும், சமூக பொறுப்புள்ள ஒரு மனிதனாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக ஜாக்கி ஜெயித்துவிட்டார் என்றால் அது மிகையாகாது.


Click it and Unblock the Notifications











