கிராமி விருதுகள் 2025.. இந்திய அமெரிக்கா பாடகி வெற்றி.. குவியும் வாழ்த்து
நியூயார்க்: Grammy Awards (கிராமி விருதுகள்) 67ஆவது கிராமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. பலராலும் எதிர்பார்க்கப்பட்ட விருதுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இசை துறையில் கௌரவமிக்க விருதாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இந்திய அமெரிக்க பாடகியான சந்திரிகா டான்டனுக்கு கிராமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் இருக்கும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வழங்கப்படும் கிராமி விருதுக்கு இசை கலைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான 67ஆவது கிராமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்க நேரப்படி நேற்று கிரிப்டோ அரங்கில் இந்த விழா நடைபெற்றது. கௌரவமிக்க விருதுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுவதால் யார் வெல்லப்போகிறார் என்ற ஆர்வம் இருந்தது.

சந்திரிகா டான்டன்: இந்தப் பிரிவில் சந்திரிகா டான்டன், ராதிகா வெகாரியா, ரிக்கி கேஜ், அனௌஷ்கா ஷங்கர் உள்ளிட்டோர் நாமினேஷனில் இருந்தார்கள். இதனால் போட்டி பலமாகவே இருந்தது. இருப்பினும் இந்திய அமெரிக்க பாடகியான சந்திரிகா டான்டன் கிராமி விருதை தட்டி சென்றார். அவர் ஒயூட்டர் கெல்லர் மேன், எரு மாட்சுமொட்டோவுடன் சேர்ந்து உருவாக்கிய திரிவேணி என்ற ஆல்பத்துக்காக இந்த விருதினை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உருக்கமான பேச்சு: பட்டு சல்வாருடன், நெக்லஸ் அணிந்தபடி வந்திருந்த சந்திரிகா, கிராமி விருதினை பெற்ற பிறகு உருக்கத்துடன் பேசினார். மேடையில் பேசிய அவர், "இசைதான் காதல். நமக்குள் இசை எப்போதும் வெளிச்சத்தை கொடுக்கிறது. அதேபோல் இருண்ட நாட்களில்கூட இசை நமக்கு மகிழ்ச்சியை பரப்பிக்கொண்டே இருக்கிறது" என்றார்.
யார் இந்த சந்திரிகா: சந்திரிகா டான்டன் இந்திரா நூயியின் சகோதரி ஆவார். இருவரும் சென்னையில்தான் சில காலம் வளர்ந்தார்கள். கிரிஷ் வசால்வார், ஷுப்ரா குஹா ஆகியோரிடம் இவர் இசையை கற்றுக்கொண்டார். மேலும் 2010ஆம் ஆண்டு ஓம் நமோ நாராயணா என்ற பாடலுக்காக கிராமி விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். ஆனால் அப்போது அவரால் வெல்ல முடியவில்லை. இந்த வருடம் வென்றிருக்கும் சந்திரிகாவுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











