லாக்டவுன் ஒருபக்கம் இருக்கட்டும்.. அவதார் 2ம் பாகத்தை இயக்க நியூசிலாந்து பறந்த ஜேம்ஸ் கேமரூன்!
வெலிங்டன்: அவதார் 2ம் பாகம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவித்திருந்த ஜேம்ஸ் கேமரூன், அதன் படப்பிடிப்புக்காக சிறப்பு விமானத்தின் மூலம் நியூசிலாந்து பறந்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடிகள் வசூலித்து உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற அந்தஸ்த்தை பெற்றது.
அவதார் படத்தின் அடுத்த பாகங்களை நியூசிலாந்தில் படமாக்கி வரும் ஜேம்ஸ் கேமரூன் லாக்டவுன் காரணமாக அமெரிக்கா திரும்பினார்.

ஏலியன்களாக மனிதர்கள்
1987ம் ஆண்டு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ஏலியன்ஸ் படத்தில் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்து பிரச்சனை கொடுப்பார்கள். கடந்த 2009ம் ஆண்டு வெளியான அவதார் படத்தில், பூமியில் இருந்து பாண்டோரா எனும் வேற்று கிரகத்துக்கு மனிதர்கள் ஏலியன்களாக சென்று அட்டகாசம் செய்வதையும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வசூல் வேட்டை நடத்தியிருப்பார்.

கூடுவிட்டு கூடு பாயும் வித்தை
இந்திய கதைகளையும் இதிகாசங்களையும் அதிகமாக பயின்று அவற்றின் மேல் அதிகளவில் ஆர்வம் கொண்டிருந்த ஜேம்ஸ் கேமரூன், அவதார் படத்தில் கூடுவிட்டு கூடும் பாயும் வித்தையை மையக் கதையாகவும், அவதார் மிஷனாகவும் எடுத்து இயக்கி இருப்பார். நீல நிறத்தை அவர் பயன்படுத்தியதற்கு ராமரின் நிறம் காரணம் என்றும் கூறப்படுகிறது. அவதர் படத்தில் முதலில் பாலிவுட் நடிகர் கோவிந்தாவை தான் நாயகனாக நடிக்க வைக்க ஜேம்ஸ் கேமரூன் திட்டமிட்டிருந்தார்.

நீண்ட இடைவெளி
அவதார் முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதன் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்த ஜேம்ஸ் கேமரூன், அந்த கதையில் மூழ்கிப் போய் 4 பாகங்களாக அவதார் படத்தை இயக்க திட்டமிட்டது தான் இந்த கால தாமதத்திற்கு காரணம். 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிட்டப்படி 2ம் பாகமும், அதற்கு அடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

2 ஆயிரம் ஏக்கர்கள்
அவதார் படத்தின் படப்பிடிப்புக்காக நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் கிட்டத்தட்ட 2400 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கியுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். படம் குறித்த எந்தவொரு தகவலும் கசியக் கூடாது என்றும், பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கவும் அந்த இடத்தை வாங்கி அங்கே ஸ்டூடியோவையும் அமைத்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.

மீண்டும் ஷூட்டிங்
நியூசிலாந்தில் கடந்த மார்ச் மத்தியில் கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. அவதார் படத்தின் ஷூட்டிங் உள்பட அனைத்து ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. உலகளவில் கொரோனா தளர்வுகள் ஏற்பட்டு வரும் நிலையில், தர்போது தனி விமானத்தில் 50 பேர் கொண்ட குழுவுடன் மீண்டும் ஷூட்டிங் நடத்த ஜேம்ஸ் கேமரூன் நியூசிலாந்த் பறந்துள்ளார்.
Recommended Video

14 நாட்கள் குவாரண்டைன்
நியூசிலாந்தின் சட்ட திட்டங்களை மதித்து 14 நாட்கள் குவாரண்டைனில் இருந்த பிறகே, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஜேம்ஸ் கேமரூனும், அவரது அவதார் குழுவினரும் அனுமதிக்க பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு அவதார் படத்தை ரிலீஸ் செய்ய லாக்டவுனையும் மீறி ஜேம்ஸ் கேமரூன் நியூசிலாந்து சென்றது ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











