மிஷன் இம்பாசிபிள்! 5,000 அடி உயரத்தில், விமானத்தின் மீது டாம் குரூஸ் சாகஸம்.. இவர் 'நிஜ ஹீரோ'
லண்டன்: நம்மூரில் ஆளுயர கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் வாங்கிக்கொண்டிருக்கும் நடிகர்கள் டூப் போட்டு சண்டை காட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், உலகமெங்கும் மார்க்கெட் வைத்துள்ள ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் 5,000 அடி உயரத்தில் பறந்த ராணுவ விமானத்தின் மீது சண்டைக் காட்சியில் காட்சியில் நடித்துள்ளார்.

ஆபத்தான சூட்டிங்
மிஷன் இம்பாசிபிள் பட சீரீசின் 5வது படமான 'மிஷன் இம்பாசிபிள் 5' திரைப்படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்த வாரம், இங்கிலாந்தில் சூட்டிங் நடந்தது. அப்போது ஏ400 எம் ரக ராணுவ விமானத்தின் வெளிப் பகுதியில் ஹீரோ நின்றபடி சண்டையில் ஈடுபடுவது மாதிரி ஒரு காட்சி எடுக்க வேண்டியிருந்தது. அதுவும் 5,000 அடி உயரத்தில் அந்த விமானம் பறக்கும்போது வெளியில் வந்து இறக்கையின் அடிப்பகுதியில் ஹீரோ நிற்க வேண்டும்.

குளிர் எப்படி இருக்கும்..
ஐரோப்பாவில் ஐந்தாயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானம் என்றால் அந்த பகுதியில் மைனஸ் டிகிரி குளிர்தான் நிலவும். மூச்சு விடுவதே சிரமம். இந்த லட்சணத்தில் அதிவேகமாக செல்லும் விமானத்திற்கு வெளியே வீசும் அதிவேகக் குளிர்காற்று வேறு மூச்சை அடைக்கும்.

நானே நடிக்கிறேனே..
ஆனால் இதைப்பற்றி அசரவேயில்லை டாம் குரூஸ். அந்த காட்சியில், தானே நடிப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்தனர் படக் குழுவினர். விபத்து ஏதாவது நேர்ந்தால் உலகிலுள்ள பல கோடி ரசிகர்கள் கலங்கிவிடுவார்களே என்ற அச்சம் படக்குழுவிற்கு தொற்றிக் கொண்டது. ஆனால் அந்த பயம் துளியும் டாம் குரூசுக்கு இல்லை.
அசரவில்லை டாம் குரூஸ்
மனிதர் அனாயாசமாக அந்த காட்சிகளில் நடித்துள்ளார். படத்தின் சூட்டிங்கின்போது முதலில் சற்று தடுமாறினாலும், அதன்பிறகு சுதாரித்துக் கொண்டு அச்சமேயில்லாமல் பறக்கும் ராணுவ விமானத்தின் மீது நின்று சூட்டிங்கை முடித்துக்கொடுத்துள்ளார் டாம் குரூஸ்.

ஏற்கனவே பல சாகசங்கள்
ஏற்கனவே Mission Impossible: Ghost Protocol படத்துக்காக, 2011ல், துபாயில் உள்ள 123 அடுக்குகொண்ட உலகின் மிக உயர கட்டிடமான ப்ருஜ் கலிபா கட்டடத்தில் டாம் குரூஸ் தொங்கும் காட்சியில் நடிக்க அதை ஐமேக்ஸ் கேமரா மூலம் சூட் செய்தனர் படக்குழுவினர். அதே படத்துக்காக பாலைவனத்தில் மணல் புயலுக்கு நடுவே கார் சேஸிங் சண்டை காட்சியிலும் டாம் குரூஸ் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மூரில் எப்படி?
தனிமனித ஆராதனை அதிகம் கொண்ட நம் ஊரில் நடிகர்கள் எந்த சாகசமும் செய்வதில்லை. பஞ்ச் வசனம், 100 பேரை அடிப்பது, வயதான காலத்தில் பேத்தி வயது பெண்ணுடன் டூயட் பாடுவது போன்றவற்றோடு அவர்கள் பணி முடிந்துவிடுகிறது. கைக்கு பணமும் வந்துவிடுகிறது. இரு வேடங்களுக்கு கூட வித்தியாசம் காண்பிக்க முடியாமல் சட்டையை மட்டும் மாற்றிப்போட்டுக் கொண்டு ஆகா.. இரட்டை வேடத்தில் கலக்கி விட்டேனே என்கின்றனர்.

என்ன கொடுமை சார் இதெல்லாம்..
இதில் வேடிக்கை என்னவென்றால் 5,000 அடி உயரத்தில் பறந்து சண்டை போடும் டாம் குரூசுக்கு பிட் நோட்டீஸ் கூட அடிப்பது கிடையாது. ஆனால் டூப் போடும் நம்மூர் கலைஞர்களுக்கு ஆளுயர கட்-அவுட், குடம் குடமாக பால் ஊற்றல்கள்....
ஒருவேளை ரிஸ்க்கான சூட்டிங்கில் நடித்து எசகு பிசகாக ஏதாவது ஆகிவிட்டால் வருங்காலத்தில் தமிழகத்தை யார் காப்பாற்றுவார் என்ற அச்சம் நம்மூர் நடிகர்களுக்கு இருக்கலாம். அதுவும் நியாயம் தான்!


Click it and Unblock the Notifications











