பாலியல் வழக்கில் இருந்து பிரபல நடிகர் விடுவிப்பு
நியூயார்க்: 18 வயது வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசிக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள நன்டக்கெட் தீவில் இருக்கும் பார் ஒன்றில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வில்லியம் லிட்டில் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

சம்பவம் நடந்தபோது வில்லியமுக்கு 18 வயது. சம்பவம் குறித்து வில்லியம் கூறியதாவது, நான் நன்டக்கெட் தீவில் உள்ள பாரில் வேலை பார்த்தபோது என் ஷிப்ட் முடிந்த பிறகு கெவினை பார்க்க காத்திருந்தேன்.
நான் அவரின் தீவிர ரசிகர். கெவினிடம் எனக்கு 23 வயது என்று பொய் சொன்னேன். கெவின் வலியுறுத்தியதால் முதன்முதலாக நான் பீர் மற்றும் விஸ்கி குடித்தேன். அதன் பிறகு அவர் என்னை தன்னுடன் வருமாறு அழைத்தார். அவர் என்னை ஏதோ செய்யத் தான் அழைக்கிறார் என்று நினைத்து நான் அவருடன் செல்ல மறுத்துவிட்டேன்.
அதன் பிறகு பாரில் என்னுடன் அமர்ந்த கெவின் என்னை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த சம்பவத்தை நான் செல்போனில் வீடியோ எடுத்தேன் என்று வில்லியம் தெரிவித்தார்.
வழக்கு தொடர்ந்த வில்லியம் நேரில் ஆஜராகி சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். மேலும் ஆதாரம் என்று கூறப்பட்ட செல்போன் மாயமாகிவிட்டதால் கெவின் ஸ்பேசி மீதான பாலியல் வழக்கு விசாரணை கைவிடப்பட்டதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
விசாரணைக்காக அந்த செல்போனை போலீசாரிடம் கொடுத்ததாகவும் அவர்கள் அதை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் வில்லியம் லிட்டில் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
நடிகர் ஆண்டனி ராப் தான் முதன்முதலாக கெவின் ஸ்பேசி மீது பாலியல் புகார் தெரிவித்தார். 1986ம் ஆண்டு தான் 14 வயது சிறுவனாக இருந்தபோது ஸ்பேசி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ராப் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











