லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதையை திருடிய ஹேக்கர்கள்
நியூயார்க்: புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரின் கதை திருடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் சோனி பிக்சர்ஸ் நிறுவன கம்ப்யூட்டர்கள் கடந்த மாதம் 24ம் தேதி கார்டியன்ஸ் ஆப் பீஸ் என்ற அமைப்பால் ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் கம்ப்யூட்டர்களில் இருந்து நடிகர், நடிகைகளின் சம்பளம், பணியாளர்கள் விவரம் மற்றும் புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரின் கதையை திருடியுள்ளனர்.

மேலும் சோனி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் இமெயில் முகவரிகளையும் அவர்கள் இணையதளத்தில் கசியவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களான மைக்கேல் ஜி.வில்சன், பார்பரா ஃபிராக்கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவன கம்ப்யூட்டர்களிலிருந்து தகவல்களை திருடியவர்கள், அதிலிருந்த ஸ்பெக்டர் திரைப்படத்துக்கான திரைக்கதையையும் திருடியுள்ளனர். இந்த திரைக்கதையை அவர்கள் விரைவில் ஆன்-லைனில் வெளியிட வாய்ப்புள்ளதாக கருதுகிறோம். இத்திரைக்கதையை பிரிட்டன் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளோம். எனவே, அதை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெக்டர் படத்தில் டேனியல் கிரெய்க், மோனிகா பெலூச்சி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸாகும்.


Click it and Unblock the Notifications











