twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருமணம் எப்போது... யாருடன்?-நயன்தாரா

    By Staff
    |

    Nayantara
    என் திருமணம் எப்போது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்பா அம்மா அனுமதியுடன்தான் நடக்கும். பிரபு தேவா பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்!" என்று கூறியுள்ளார் நயன்தாரா.

    அவர் அளித்துள்ள பேட்டியில்,

    "சமீபத்தில் நான் நடித்து வெளி வந்த ஆதவன், பாடிகார்ட், அடூர்ஸ் படங்கள் பெரும் வெற்றி (?!) பெற்றுள்ளன. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் நடித்த மலையாளப் படம் பாடிகார்ட் நன்றாக ஓடுகிறது.

    நான் முதல் முதலாக விநாயக் டைரக்ஷனில் லட்சுமி என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. அதே விநாயக் இயக்கத்தில் மீண்டும் நடித்த அடூர்ஸ் படமும் வெற்றி அடைந்து இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

    இப்போது தமிழில் பாஸ் என்ற பாஸ்கரன் என்ற படத்தில் ஆரியாவுடன் ஜோடியாக நடித்து கொண்டு இருக்கிறேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும், மலையாளத்தில் ஷியாம் பிரசாத் இயக்கத்திலும் நடித்து கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன்.

    கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாகவும் நடிக்கிறேன். நான் பெங்களூரில் பிறந்தவள் என்றாலும் கன்னடம் பேச தெரியாது. மற்றவர்கள் பேசினால் புரிந்து கொள்வேன்.

    2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி திரையுலகத்திற்கு வந்தேன். பொதுவாக சினிமாவுக்கு வருபவர்கள் பெயரும், புகழும் பெற வேண்டும். பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் நான் சினிமாவுக்கு வரும் போது எனக்கு எந்த வித ஆசையும் கிடையாது. ஒரே ஒரு படம் நடித்து விட்டு போய் விட வேண்டும் என்று நினைத்தேன்.

    ஆனால் வந்த பின் சினிமாவுடன் ஐக்கியமாகி விட்டேன். நான் எதிர்பார்த்திராத அளவுக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைத்தது. சினிமாவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். குறிப்பிட்டு சொல்லும் படி எந்த லட்சியமும் இல்லை. நல்ல படங்கள் அமைய வேண்டும். பெயர், புகழுடன் இருக்க வேண்டும். அது தான் என் ஆசை.

    இன்றைய நிலையில் என் வாழ்க்கை நல்லபடியாகவே போய்க் கொண்டு இருக்கிறது.

    என் திருமணம் எப்போது நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் சரியான நேரத்தில் நடக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டும்.

    அது காதல் திருமணமா, பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையா என்று சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. என் திருமணம் அம்மா-அப்பா அனுமதியுடன்தான் நடைபெறும். யாருடன் நடக்கும் என்பது தெரியாது..." என்று கூறியுள்ளார்.

    பிரபுதேவாவுடன் உங்களை இணைத்து வரும் செய்திகளுக்கு, உங்கள் பதில் என்ன? என்ற கேள்விக்கு, 'நோ கமெண்ட்ஸ்' என்று கூறிவிட்டார் நயன்.

    வரும் 6ம் தேதி முதல்வர் கருணாநிதிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பிரபுதேவாவுடன், நீங்கள் நடனம் ஆடப்போவதாக பேச்சு அடிப்படுகிறதே? என்ற கேள்விக்கும் மழுப்பலாகவே பதில் தந்துள்ளார். நிச்சயம் விழாவில் கலந்துகொள்வேன் என்று மட்டும் பதில் தந்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X