சிறப்பு விருது-பத்மப்ரியா ஆனந்த கண்ணீர்

தமிழக அரசு சமீபத்தில் 2007, 08ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதை வழங்கியது. இதில் 2007ல் வெளிவந்த மிருகம் படத்தில் சிறப்பாக நடித்ததை அடுத்து பத்மபிரியாவுக்கு சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில்,
தமிழக அரசின் இந்த விருதை ஒரு கௌரவமாக கருதுகிறேன். அதை முதல்வர் கருணாநிதி கைகளில் பெறவிருப்பதை நினைக்கும் போது ஆனந்த கண்ணீர் என்னை நனைத்து விடுகிறது. நான் மேலாண்மை படிப்பு படித்துள்ளேன். நடனம் நன்றாக கற்றுள்ளேன்.
சினிமாவின் மீதுள்ள காதல் காரணமாக தான் அதில் நடித்து வருகிறேன். நான் நடித்ததில் எனக்கு பல வேடங்கள் பிடிக்கும். நான் பொக்கிஷம் படத்தின் நதீரா பாத்திரத்தில் இருந்து என்னால் இன்னும் முழுமையாக விடுபட முடியவில்லை.
விரைவில் வெளிவர இருக்கும் பழஸி ராஜா படத்தில் ஆதிவாசி பெண்ணாக விரும்பி நடித்துள்ளேன். இந்தியில் ஸ்டிரைக்கர் படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். இதுவும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றார்.
சமீபத்தில் மலையாள பத்திரிகையாளர்களிடம் 'தமிழ் இயக்குனர்களுக்கு எனது திறமை தெரியவில்லை. அவர்களுக்கு என்னை பயன்படுத்தி கொள்ள தெரியவில்லை' என பத்மப்பிரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்னொன்று, இந்த மிருகம் படத்தில் நடித்தபோதுதான், அந்தப் பட இயக்குநர் சாமி தன்னை அறைந்துவிட்டதாக பெரும் களேபரத்தில் இறங்கினார் இந்த நடிகை என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











