ஈழத் தமிழர் வாழ்க்கையை படமாக்க ஆசை, ஆனால் தைரியம் இல்லை - கமல்

கேள்வி கேட்டவர்களை அவர்களின் கேள்விகளாலேயே மடக்கிய விதம் ரசிக்கும்படி, இப்படித்தான் இருக்கணும் பிரஸ் மீட் என்று மெச்சும்படி அமைந்தது.
அதன் விவரம்:
கேள்வி: 'தலைவன் இருக்கின்றான்' என்ற பெயரே நன்றாகத்தான் இருந்தது. அந்த பெயரை ஏன் மாற்றினீர்கள்?
பதில்: உன்னைப்போல் ஒருவன்' என்ற பெயரும் நன்றாகத்தான் இருக்கிறது. இந்த பெயர், ஜெயகாந்தனிடம் இருந்து பெறப்பட்ட பெயர். இது, அவருக்கு நான் கொடுக்கும் மரியாதை. 'தலைவன் இருக்கின்றான்' என்ற பெயரை விட்டுவிட மாட்டேன். அதை இன்னொரு படத்துக்கு வைப்பேன்.
கேள்வி: இன்னொரு மொழியில் வந்த படத்தை ஏன் 'ரீமேக்' செய்ய வேண்டிய அவசியம் என்ன?
பதில்: இது கம்பன் காலத்து வழக்கம். கம்பன் கூட ராமாயணத்தை 'ரீமேக்'தான் பண்ணினார். இந்திப் படத்தை அப்படியே எடுக்காமல், தமிழுக்கு தகுந்தபடி சில மாற்றங்களை செய்து இருக்கிறோம்.
அரசியல், நாட்டுக்கு நாடு மாறுவதில்லையா? அதே போல் ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது அல்லவா? நாங்கள் இங்குள்ள பிரச்சினைகளை படத்தில் சேர்த்துள்ளோம்.
கேள்வி: இதில், ஈழ தமிழர் பிரச்சினை உள்ளதா?
பதில்: இல்லை.
கேள்வி: இலங்கையில் நடைபெறும் பிரச்சினை பற்றி உங்கள் கருத்து?
பதில்: அதைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பதில் பயனில்லை. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். அதற்கான முயற்சியை எடுக்க வேண்டியவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் பேசி கெடுக்காமல் இருந்தால் சரி. திரையுலகம் என்பது வேறு. அப்புறம் பேசலாம்.
கேள்வி: ஈழ தமிழர்களின் வாழ்க்கையை படமாக்குவீர்களா?
பதில்: எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் தைரியம்தான் இல்லை. அது ஏன் என்று பத்திரிகைக் காரங்களாகிய உங்களுக்கே தெரியும்.
கேள்வி: உங்கள் படைப்புகள் அடித்தட்டு மக்களை போய் அடைவதில்லை என்று சொல்லப்படுகிறதே?
பதில்: எம்.ஜி.ஆர். மாதிரி மக்களின் ரசனையை அறிந்தவர் யாராவது உண்டா? அவர் படத்தை அங்குலம் அங்குலமாக அளந்து பார்த்து எடுக்கும் நிபுணர். அவர் நடித்த பாசம்' படம் பரமக்குடியில் பத்து நாட்கள்தான் ஓடியது.
எல்லோரும் எப்போதும் ஜெயித்துக் கொண்டிருக்க முடியாது. சிலரைப் போய்ச் சேரவில்லை என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
கேள்வி: மர்மயோகி' படம் என்ன ஆனது?
பதில்: அப்புறம் சொல்கிறேன்.
கேள்வி: 'தசாவதாரம்' படத்தை அடுத்து உங்கள் பெரிய முயற்சி எது?
பதில்: 19 ஸ்டெப்ஸ் என்ற படம்.
கேள்வி: இரண்டு பெரிய கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கிறீர்கள். இரண்டு பேருக்கும் ஜோடி இல்லை என்றால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்களே?
பதில் (சிரித்தபடி): அப்படின்னா நீங்கள் என்னை ரசிக்கவில்லையா? நாங்கள்லாம், ஏதோ எங்களுக்காகத்தான் நீங்க வர்றீங்கன்னு நெனச்சிக்கிட்டிருந்தோம்...!
கேள்வி: நசிருதீன் ஷா, அனுபம் கேர் என்ற இரண்டு சாதாரண நடிகர்கள் நடித்த கதையில், கமல்ஹாசன், மோகன்லால் என்ற இரண்டு மாபெரும் நடிகர்கள் நடிக்கிறீர்களே, இது தேவையா?
பதில்: ஏங்க இது என்ன வம்பா இருக்கு... தப்பு உங்ககிட்டதான். நடிகர்களான எங்களை நட்சத்திரங்களாக்கி அழகு பார்த்தவர்கள் நீங்கள்தான். நீங்கள் கொடுத்த கிரீடத்தை அவ்வளவு சுலபமாக கழற்ற முடியாது என்று பேட்டியை கலகலப்பாக கொண்டு போனார் கமல்ஹாசன்.


Click it and Unblock the Notifications











