தேர்தலில் போட்டியிட சீட் கேட்கும் நக்மா

காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நக்மா தொடர்ந்து பாட்ஷா மற்றும் பல வெற்றிப் படங்களில் இடம்பெற்று நம்பர் ஒன் நடிகையாகத் திகழ்ந்ததும், பின்னர் சரத் குமார் விவகாரத்தில் காணாமல் போனவர், சூர்யாவுக்கு நெருங்கிய சொந்தமான பிறகும் கூட, தமிழ் சினிமா பக்கமே வர முடியாமல் தவிப்பதும் தெரிந்த கதை.
இடையில் கங்குலியுடன் காதல் கிசு கிசுவில் மாட்டினார். கொஞ்சநாள் கழித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மும்பையிலேயே நிரந்தரமாக செட்டிலாகியும் விட்டார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் கூட செய்தார். இப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடவும் ஆர்வம் காட்டி வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தேர்தலில் போட்டியிட அவருக்குள்ள தகுதிகள் குறித்துப் பேசினார். அவர் கூறியதாவது:
இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். எனது ஆர்வத்தை கட்சி மேலிடத்தில் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.
வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். அல்லது உ.பி மாநிலத்திலேயே போட்டியிட வாய்ப்பு தந்தாலும் எனக்கு ஓகேதான். அலகாபாத், மொராதாபாத் ஆகிய ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் அனுமதித்தால் போட்டியிட தயாராக இருக்கிறேன்.
எனது இந்த விருப்பம் குறித்து கட்சி மேலிடம் விரைவில் முடிவு செய்யும் என்று நம்புகிறேன்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிட்டாலும் எனக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். ஏனென்றால் நான் ஏராளமான போஜ்புரி மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறேன். இந்த மொழி பேசும் வடக்கு உத்தரப்பிரதேச பகுதிகளில் எனக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.
2004ம் ஆண்டு தேர்தலிலேயே நான் போட்டியிடுவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் அப்போது நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால் அது நடக்கவில்லை. இதனால் அப்போது காங்கிரசுக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்தேன். இப்போது எம்பியாகி நிறைய சேவை செய்ய வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளேன்.
தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தால் கல்வி, பெண்கள் பிரச்சனை மற்றும் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
நாட்டின் மதச்சார்பின்மைக்கு அடையாள சின்னமாக நானே ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறேன். எனது குடும்பத்திலேயே மதச் சார்பின்மை உள்ளது. ஏனென்றால் எனது தந்தை ஒரு பிராமணர். தாயாரோ முஸ்லிம். மதச்சார்பின்மை என்பது நாட்டின் முழுமைபெற்ற கொள்கையாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்.


Click it and Unblock the Notifications











