twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன்... என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! - ஷாம்

    By Chakra
    |

    ஜீவாவின் 12 பியில் அறிமுகமாகி, இளம் பெண்களின் சாக்லேட் பாயாக மாறியவர் ஷாம். தொடர்ந்து இயற்கை, உள்ளம் கேட்குமே... என தமிழ் சினிமாவின் பெயர் சொல்லும் படங்களின் நாயகன்.

    தமிழில் 'லவர் பாய்' பாத்திரங்களில் டிஸ்டிங்ஷனே வாங்கிய ஷாமின், நடிப்பு வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையைத் தந்தது சுரேந்தர் ரெட்டி இயக்கிய தெலுங்குப் படம் கிக். வசூலில் புதிய சாதனைப் படைத்தது. பார்த்தவர்கள் சாஃப்டான ஷாமுக்குள் இப்படி ஒரு அதிரடி நாயகனா என பாராட்டினார்கள்.

    இப்போது தெலுங்கில் கொடுக்க தேதி இல்லாத அளவுக்கு கால்ஷீட் டைரி ஃபுல்!

    தமிழில், திருமலை இயக்கத்தில் ஷாம் நடித்த 'அகம் புறம்' டிசம்பர் 10, வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

    தமிழில் அடுத்து என்ன திட்டம்? தெலுங்குக்கு முக்கியத்துவம் தரும் வேகத்தில் தமிழை விட்டுவிட்டாரா?

    இதோ ஷாம்... அவரிடமே கேட்டுவிடலாமே!

    'அகம் புறம்' பற்றிச் சொல்லுங்கள்...

    அகம் புறம் ஒரு பர்பெக்ட்டான ஆக்ஷன் என்டர்டெயின்மெண்ட். உண்மையில் சொல்லணும்னா, தமிழில் நான் நடித்து வரும் முதல் ஆக்ஷன் படம் இந்த அகம் புறம். திருமலை இயக்கியிருக்கிறார். இதுவரை மென்மைான கேரக்டர்கள் மட்டுமே பண்ணிக்கிட்டிருந்த என்னை அப்படியே 360 டிகிரிக்கு மாத்தியிருக்கார்னுதான் சொல்லணும். கொஞ்சம் வில்லத்தனம் கலந்த மாதிரி ஒரு கேரக்டர் இது. எனக்கே என் நடிப்பு இந்தப் படத்தில் பிடிச்சிருந்தது.

    சுந்தர் சி பாபு அட்டகாசமா இசையமைச்சிருக்காரு. பாடல் ஒவ்வொண்னும் இதுவரை நீங்க கேட்டிராத புதியமெட்டாக வந்திருக்கு. பின்னணி இசையும் ரொம்ப வித்தியாசமா வந்திருக்கு.

    இன்னொன்னு, இந்தப் படத்தோட இணை தயாரிப்பாளராகவும் நான் இருக்கேன். தயாரிப்பு அனுபவம் எனக்கு ரொம்ப புதுசு. ஆனா நல்ல தரமான படங்களைத் தயாரிக்கனும் என்ற வேகத்தைத் தந்திருக்கு அகம் புறம் அனுபவம்.

    தமிழில் கொஞ்சம் இடைவெளி விழுந்த மாதிரி இருக்கே...

    இடைவெளி இல்லே. நானாதான் நிறைய கமிட் பண்ணாம விட்டுட்டேன். காரணம் எப்போதும் ஒரே மாதிரி படங்கள் பண்ண வேணாமேன்னுதான். ஆனால் பெரிய இடைவெளின்னு எதுவும் இல்ல. சமீபத்தில் கூட நான் நடிச்ச தில்லாலங்கிடி வெளியாகி நல்லா போச்சு. ஆனா முன்பு போல இல்லாமல் மிகவும் தேர்ந்தெடுத்துதான் படங்களை ஒப்புக் கொள்கிறேன்.

    தமிழில் அடுத்த படங்கள் என்ன...

    இப்போ அகம் புறம் ரிலீசாகுது. எனக்கே என்னை ரொம்பப் பிடிச்ச மாதிரி வந்திருக்கிற படம்.ய

    அடுத்த முகவரி படம் தந்த வி இஸட் துரை இயக்கத்தில் ஒரு படம். பக்காவான ஸ்கிரிப்ட். ரொம்ப அற்புதமான, எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள கதை இது. இன்னும் பெயர் முடிவு செய்யல. டிஸ்கஷன் போயிட்டிருக்கு. சீக்கிரமே ஷூட்டிங் போயிடுவோம். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும்.

    இந்தப் படத்துக்குப் பிறகுதான் வேற படங்கள்.

    உங்க சொந்தப் படம், 'தூசி'...?

    துரை படம் முடிஞ்ச பிறகுதான் அதெல்லாம். திருமலைதான் அந்தப் படத்தையும் இயக்குகிறார்.

    ஒரு தயாரிப்பாளரா உங்க அனுபவம்...?

    இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். நல்ல கதைகள் படமாக வேண்டும். நல்ல படங்கள் வரவேண்டும்... இதான் என் நோக்கம். ஆனால் இப்போது முழு மூச்சாக தயாரிப்பில் இறங்கப் போவதில்லை. நடித்து முடிக்க வேண்டிய படங்கள் நிறைய உள்ளன. எனவே அவற்றை முடித்த பிறகு தயாரிப்பில் இறங்கத் திட்டமிட்டுள்ளேன். அகம் புறம் ஒரு அருமையான படம். எனவே அந்தப் படம் சீக்கிரம் முடிந்த வரவேண்டும் என்பதால் இணை தயாரிப்பாளராக களமிறங்கினேன்.

    தெலுங்கில் தனி ஹீரோவாகவே தூள்கிளப்ப ஆரம்பிச்சிட்டீங்க போல...?

    ஆமாம்... கிக் வெற்றி தந்த உயர்வு இது. பொதுவா தெலுங்கில் பிறமொழி ஹீரோக்கள் நேரடியாக ஸோலோ ஹீரோ பண்றது பெரிய விஷயம். கிக் படம் வசூலில் பெரும் சாதனைப் படைத்தது. இப்போ தெலுங்கில் மூன்று படங்கள் பண்ணுகிறேன்.

    கிக் படம் தந்த சுரேந்தர் ரெட்டி இயக்கும் ஒசரவல்லி படத்தில் ஹீரோவா பண்றேன். ரமேஷ் வர்மா என்ற புதிய இயக்குநரின் படத்தில் ஹீரோவா பண்றேன். இதில் என்னுடன் ரவி தேஜாவும் நடிக்கிறார். படத்துக்குப் பெயர் வீரா.

    மூன்றாவது படம் ஷேத்ரா. வேணுகோபால் இயக்குகிறார். இதில் எனக்கு ப்ரியாமணி ஜோடி. மூன்றுமே வித்தியாசமான கதைகள். பெரிய நம்பிக்கை தந்திருக்கு.

    இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லைதானே...?

    பிரச்சினையில்லை... இரண்டு கண்டிஷன்கள் ஒத்துப்போனால்! நல்ல கதை... சமமான வாய்ப்பு அமைய வேண்டும். தில்லாலங்கிடியில் எனக்கும் ஜெயம் ரவிக்கும் சரிசமமான வாய்ப்பு இருந்தது. அப்படி அமைய வேண்டும். மற்றபடி, நான் ஸோலோவாதான் நடிப்பேன் என்ற பிடிவாதம் எனக்கில்லை.

    தமிழில் நம்மை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்ற ஏக்கம் உள்ளதா..?

    உண்மைதான். என்னை அறிமுகப்படுத்திய ஜீவா இல்லாத குறையை உணர்கிறேன். 12 பி, உள்ளம்கேட்குமே... படங்களில் அவர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்தேன். என்ன அருமையான படங்கள் அவை... இயக்குநர்கள் சொல்வது போல நடிக்க நான் தயார்... என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறேன்.

    தமிழில் மிகச்சிறந்த படைப்பாளிகள் உள்ளனர். அவர்கள் என்னைப் பயன்படுத்திக் கொண்டால் சந்தோஷப்படுவேன்", என்றார்.

    English summary
    Actor Shaam, who is very busy in Telugu films now, requests Tamil film makers to use him for proper roles. In his interview to oneindia.in, the actor told that there are lot of good creators in Tamil and hopes they would turn to his favour soon. At present Shaam is acting in lead roles in 3 Telugu films and 2 Tamil films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X